செய்திகள்

நாட்டில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!

Published

on

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சண்டிக கங்கந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் தற்போதுள்ள மருந்துகளின் இருப்பு மூன்று மாதங்களுக்கே போதுமானது. அத்தியாவசியமான மருந்துகளுக்கு நாட்டில் 5% தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலான மருந்தகங்கள் மாற்று வர்த்தக நாமங்களையுடைய மருந்துகளையே தற்போது நுகர்வோருக்கு வழங்கி வருகின்றன. இந்த நடைமுறையை நீண்டகாலத்துக்கு நீடிக்க முடியாது.

மருந்து பிரச்சினை என்பது நாட்டின் அனைத்து மக்களின் ஆரோக்கியம் சம்பந்தமானது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஏனைய பொருட்களின் தட்டுப்பாட்டை விட மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினையால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும்.

இதனை நிவர்த்திசெய்ய அரசாங்கம் தலையிடாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக மருந்துகளை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், சில மருந்துகளுக்கு விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்டால் பெரும்பாலான மருந்தகங்களில் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.

தொடர்ச்சியாக மருந்துகளுக்கு தட்டுப்பாடு தொடருமாயின், இன்சுலின் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது, நாட்டில் பரசிட்டமோல், பனடோல், பனடீன், ஃப்ரீசியம், சாதாரண உப்பு மற்றும் ஜினாட் உள்ளிட்ட மருந்துகளில் பெரும்பாலானவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் சிரப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது, கொவிட், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை சமூகத்தில் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், பரசிட்டமோல் மாத்திரைகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சந்தைக்கு பரசிட்டமோல் போதியளவு விநியோகம் இல்லாமையால் நாட்டில் பரவலாக தட்டுப்பாடு நிலவி வருகிறது – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version