செய்திகள்
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடை! – உச்சகட்ட ஆலோசனையில் பிரித்தானியா
இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள் குறித்த ஆலோசனைகள் இடம்பெறுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விடயங்களில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட ஏனைய நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றில் வைத்து கருத்துரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரித்தானியாவின் சர்வதேச மனித உரிமை தடைகளின் கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்துவருகின்றது.
எதிர்கால தடைகள் குறித்து பொதுவாக நாங்கள் ஊகங்களை வெளியிடுவதில்லை அவ்வாறு செய்வது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவைப் பின்பற்றி இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தக் குற்ற தடைகளை விதிப்பதற்கு பிரித்தானியாவிற்கு. மேலும் என்ன ஆதாரங்கள் வேண்டும் என தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டொனாக் கேள்வி எழுப்பிய வேளையே அமன்டா மில்லிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான முதன்மை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரித்தானிய மனித உரிமை ஆணையகத்தின் அடுத்த அமர்விற்கு முன்னதாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளது என இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலண்ட் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login