செய்திகள்

புகை பிடிக்க இளைஞர்களுக்கு வாழ்நாள் தடை!

Published

on

இளைஞர்கள் புகை பிடிக்க வாழ்நாள் தடையொன்றை நியூசிலாந்து அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் முழுவதும் புகை பிடிக்க தடையாக அமையும்.

நேற்று  அறிவிக்கப்பட்ட இந்த புதிய சட்டம், அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சட்டம் ஆண்டுதோறும் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை அதிகரிக்க வகை செய்யும்.

இந்த சட்டம் அமலுக்கு வந்து, 65 ஆண்டுகளுக்கு பிறகுதான் கடைகளுக்கு சென்று சிகரெட் வாங்க முடியும். ஆனால் அவர்கள் தங்களுக்கு 80 வயதாகி விட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் .

ஆனால் நடைமுறையில் பல தசாப்தங்களுக்கு முன்பாகவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் மறைந்து விடும் என்று நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2008-ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் சிகரெட்டுகளோ, பிற புகையிலை பொருட்களோ தங்கள் வாழ்நாளில் வாங்க முடியாதென தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஆயிஷா வெரால் கூறும்போது,

“இளைஞர்கள் ஒருபோதும் புகைபிடிக்க கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

நியூசிலாந்து அரசு அமல்படுத்த உள்ள இந்த புதிய சட்டத்தை வைத்தியர்களும், சுகாதார நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.

இந்த சட்டம் பற்றி ஒட்டகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜானட் கூக் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த சட்டமானது சிகரெட் புகைப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும். இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது குறைந்து விட கூடிய வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார்.

இச்சட்டத்தை நியூசிலாந்து மக்கள் வரவேற்றுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

#world

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version