செய்திகள்

இலங்கையர்கள் சட்டவிரோத குடியேறிகள் – மீண்டும் மத்திய அரசு அதிரடி!!!

Published

on

இலங்கையர்கள் சட்டவிரோத குடியேறிகள் – மீண்டும் மத்திய அரசு அதிரடி!!!

இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் சட்டத்தின்படியே தீர்மானம் மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா வந்து குடியேறியுள்ள இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்கள் விடயத்தில் உணர்ச்சிபூர்வமாக மட்டும் தீர்மானம் எடுக்க முடியாது. இது தொடர்பில் சட்டத்தின்படி மட்டுமே தீர்மானம் மேற்கொள்ளமுடியும். – இவ்வாறு இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பில், இந்திய உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாது காலந்தாழ்த்துவதற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த மனுவுக்கு எதிராக இந்திய அரசு சார்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கு உரியவாறு அறிவித்தல் கிடைக்காத நிலையில், குறித்த வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ள நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகளுக்கு அறிவித்தலை அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி – கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள், தமக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மனுதாரர்கள் குடியுரிமை கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த
விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், இந்த உத்தரவு, முறையாக நிறைவேற்றப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. நிலுவையிலுள்ள இந்த வழக்குக்கு எதிராகவே இந்திய அரசால் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைச்சாமி ஆகியோர் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போ​தே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version