சினிமா

களைகட்டிய விக்கி – நயன் திருமணம்

Published

on

தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையாக கடந்த சில வருடங்களாக அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நயன்தாரா.

இவர் கேரள மாநிலம், திருவல்லா என்ற ஊரில் கிறிஸ்துவ குடும்பத்தில் 1984ம் ஆண்டு பிறந்தவர். டயானா மரியம் குரியன் என்பது பெற்றோர் வைத்த பெயர்.

நயன்தாராவின் அப்பா இந்திய விமானப் படையில் பணியாற்றியதால் இந்தியாவில் உள்ள பல ஊர்களில் படித்து வளர்ந்தார் நயன்தாரா. ஆனால், கல்லூரிப் படிப்பை தனது சொந்த ஊரில் பயின்று, ஆங்கிலத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.

ஆரம்ப காலங்களில் மலையாள டிவிக்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு ‘மனசினக்கரே’ என்ற படத்தின் மூலம் 2003ம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2005ம் ஆண்டு சரத்குமார் ஜோடியாக ‘ஐயா’ படத்தில் அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ஹரி.

இரண்டாவது படமே ரஜினிக்கு ஜோடியாக ‘சந்திரமுகி’ படத்தில் நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்ற மெல்ல மெல்ல புகழின் உச்சிக்குச் சென்றார்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமானார். ஆனாலும், தெலுங்கை விட தமிழில்தான் அதிகப் படங்களில் நடித்துள்ளார். கடந்த 17 வருடங்களாக தமிழில் கதாநாயகியாக நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் .

வளர்ந்து வரும் போதே அதிகமாக கிசுகிசுக்கள் சர்சைகளில் சிக்கி கொண்டார். சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதலில் இருந்தார். பிரபுதேவாவைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். ஆனால், திடீரென அத்திருமணம் நின்று போனது.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்த போது அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.

கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்து ஜோடி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தங்கள் ஜோடிப் புகைப்படங்களை பதிவிட்டும் வந்தனர்.

இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ”தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்” எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

‘பின்னர் காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்பட வெளியீட்டின் போது விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் திருமணத்தை உறுதிப்படுத்தியிருந்தார். இதையடுத்து ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. அங்கு 150 விருந்தினர்கள் வரை திருமணத்தில் கலந்துகொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

பின்னர் இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் நடக்கவுள்ளதை அறிவித்தனர்.

ஜூன் 9-ம் தேதி திருமணத்தை அறிவித்திருந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. கோலாகல ஏற்பாடு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய விருந்து என தடபுடலாக நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி காதலி நயன்தாராவை இயக்குநர் விக்னேஷ் சிவன் கரம் பிடித்தார். இத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, அஜித், சரத்குமார், எஸ்.ஜே சூர்யா, கார்த்தி, சூர்யா, ஷாருக்கான் இயக்குநர்கள் அட்லீ, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதால் விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ்- ல் ஒளிபரப்பப்பட உள்ளது.

திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாகி பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#Cinema

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version