ஜோதிடம்

ஆவணி மாத ராசி பலன்கள் – அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்

Published

on

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் பயணம் செய்வதால் சிம்ம மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. “சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை.சிவபெருமானுக்கு மேம்பட்ட தெய்வம் இல்லை” என்று அகத்தியர் குறிப்பிட்டிருக்கிறார்.

விநாயகப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்ததும் ஆவணி மாதத்தில் தான்.

ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் துவங்கி மீனம் ராசி வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம் வாங்க.

மேடம்
எல்லா விதத்திலும் அனுகூலங்கள் நிறைந்து காணப்படும். பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களுக்குச் சென்று வருதல் நன்மை பயக்கும். எந்தவொரு விஷயத்திலும் படபடப்பு வேண்டாம். ஆவணி மாதத்தில் பல காலங்களாக முடியாமல் இருந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரும் காலமாக இருக்கும். இதுநாள் வரை இருந்த பணத் தட்டுப்பாடு தீரும், வீடு, மனை வாங்கும் சூழ்நிலைகள் அமையப் பெறும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல பணவரவு இருக்கும். குடும்பத்தில் அன்னியோனிய குறையானது நீங்கும்.

நிதானத்துடன் செயல்பட்டு பல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த பாரங்கள் குறையும். பலரும் உங்களைப் பார்த்து ஆச்சரியம் கொள்ளும் அளவு உங்கள் வாழ்க்கையானது மாறும். எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையானது ஏற்படும். நீண்டநாட்களாக நிறைவேறாமல் இருந்த விஷயங்களைச் சரிசெய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனக் கசப்பு ஏற்படும், எதிலும் அவசரத்தனம் வேண்டாம். குல தெய்வ வழிபாடு செய்வது மற்றும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்து வருதல் நல்லது.

ரிஷபம்

தாய் வழி உறவு, தந்தை வழி உறவுடன் வாக்குவாதங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். உத்தியோக நிமித்தமாக எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த திருப்புமுனையினைக் கொடுக்கும் முடிவாக அமையும். நீண்ட நாட்களுக்குப் பின் ஆவணி மாதத்தில் நன்மைகள், அனுகூலங்கள் போன்றவை உங்கள் வாழ்வில் நடக்கப் பெறும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த சுபகாரியம் சார்ந்த தடைகள் நீங்கும். மனதில் இருந்த பாரங்கள் குறையும்.

தொழில் அபிவிருத்திக்கான காலகட்டமாக இது இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும் மாதமாக இருக்கும். வெளியூர்ப் பயணங்கள், உள்ளூர்ப் பயணங்கள் என ஆதாயம் தரும் விஷயங்களுக்காக பயணம் செய்வீர்கள். பூர்விக வழிச் சொத்துகளால் சிறு சிறு பிரச்சினைகள் வரும். நிதானமாகச் செயல்பட்டால் மட்டுமே பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த சுபகாரியத்தில் கைகூடும் காலமாக இருக்கும். குழந்தைகள் கல்வியில் மேம்பட்டுக் காணப்படுவார்கள். பெற்றோர் உடல்நலனில் அக்கறை செலுத்துதல் வேண்டும்.

மிதுனம்

உத்தியோகம், தொழில், வியாபாரம் என அனைத்திலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும் மாதமாக இருக்கும். சூரியனின் ஆதிக்கம் மிகப் பெரிய பலத்தினைக் கொடுக்கும், தன்னம்பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும். தொழிலில் இருந்த பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து காணப்படும். மேலும் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு, பணி இடமாற்றம் என நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

வண்டி, வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பெரியோர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்தல் நல்லது. பெற்றோர் உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. எதிரிகளுடன் வீண் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. செவ்வாய் 12 இல் மறைவதால் உடல் பாதிப்புகள் இருந்தாலும் பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு வழிவகுக்காது. உள்ளூர்ப் பயணங்கள், வெளியூர்ப் பயணங்கள், கடல் கடந்த பயணங்கள் மிகச் சிறந்த அனுகூலம் நிறைந்த ஒன்றாக காணப்படும்.

பழைய கடன்களைத் தீர்த்து முடிப்பீர்கள். திருமண காரியங்களை இந்த ஒரு மாதத்திற்குத் தள்ளிப் போடுதல் வேண்டும். எந்தவொரு முடிவினையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துச் செயல்படுதல் வேண்டும். குழந்தைகள் மந்தநிலையுடன் செயல்படுவார்கள்.

கடகம்

காது, மூக்கு, தொண்டை, சளித் தொல்லை போன்றவற்றால் அவதியுறும் நிலை ஏற்படும், உடல் நலனில் கவனமுடன் இருத்தல் நல்லது. மனதில் இருந்த நீங்காத பாரங்களும், குறைகளும் மறையும்.
உத்தியோகம் ரீதியாக ஏற்றங்களை எதிர்பார்க்கலாம். வாக்குதானஸ்தனத்தில் கோபதாபங்கள் வேண்டாம், தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, பூர்விக சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.

சுபகாரியங்களில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தடைகள் சரியாகும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்த மனக் குறைகள் சரியாகும். கணவன் – மனைவி இடையே வாக்குவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. எதிலும் நிதானமாகச் செயல்படும் தன்மை கொண்ட நீங்கள் அதிக நேர்த்தியுடன் செயல்பட வேண்டாம்.

உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகக் குறையும். நரசிம்மர் வழிபாடு, அனுமான் வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். உங்களுடைய குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையீடு கூடாது. அதேபோல் அடுத்தவர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையீடு செய்தல் கூடாது. வண்டி, வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலும் வீடு, மனை சார்ந்த உங்களுடைய கனவு நிறைவேறும் மாதமாக இருக்கும்.

சிம்மம்

உங்கள் இராசியில் சூரியன் வருவதால் நரம்பு மற்றும் கண் சம்பந்தப்பட்ட உபத்திரங்கள் ஏற்படும், மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லது. வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் இருந்த மனக் குறைகள் நீங்கும். பழைய கடன்களில் இருந்து மீண்டு வருவீர்கள், தொழில் அமைப்பில் பல மாதங்களாக இருந்த பாதிப்புகள் நீங்கும் மாதமாக இருக்கும்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் வேண்டாம், சக பணியாளர்களுடன் மனச் சங்கடங்கள் ஏற்படும், நிதானம் மட்டுமே பிரச்சினைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் தடுப்பதாக இருக்கும். சிறிய வாக்குவாதங்கள் செய்தால் கூட, பெரும் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். நண்பர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும், உணவு சார்ந்த விஷயங்களில் சிறிது கவனத்துடன் இருத்தல் நல்லது.

விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்து வந்தால் அனுகூலங்கள் ஏற்படும், பெற்றோர் உடல் நலனில் மேம்பட்டுக் காணப்படுவார்கல். குழந்தைகள் கல்வியில் மேம்படுவார்கள், உடன் பிறப்புகளுடன் இருந்த பிரச்சினைகள் சரியாகும். சுபகாரியங்களுக்கான வேலைகளை ஆரம்பிப்பீர்கள்.

கன்னி

விரயச் செலவுகள் ஏற்படும் காலமாக இருக்கும், அதிக அளவில் கடன்கள் வாங்கிச் செலவு செய்தலைத் தவிர்த்தல் நல்லது. முடிந்தளவு சிக்கனத்துடன் செயல்பட்டால் மட்டுமே புதிதாக கடன் வாங்குவதில் இருந்து தப்பலாம். பணரீதியாக மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் நன்மைக்காக எடுத்துக் கூறும் விஷயங்களை காது கொடுத்துக் கேட்க வேண்டும். முன் கோபம் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும், உத்தியோக, தொழில்ரீதியாக மன உளைச்சல்கள் நிறைந்து காணப்படும்.

காதலிப்பவர்கள் இடையே பிரிவுகள் ஏற்படும், அதேபோல் குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான சிறு சிறு பிரச்சினைகளும் பெரும் பிரச்சினைகளாக உருவெடுக்கும். பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் ஏற்படும் பிரச்சினைகள் மன நிம்மதி குறையும். சிம்மத்தில் சூரியன் இருப்பதால் தேவையில்லாத விஷயங்களில் தலையீடு வேண்டாம். நவக்கிரகர் வழிபாடு, குரு வழிபாடு செய்து வருவது மன பாரத்தைக் குறைக்கும்.

உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வயிறு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படும். குழந்தைகள் படிப்பில் மந்தநிலையுடன் செயல்படுவார்கள்.

துலாம்

குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் சரியாகும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும், தொழில் ரீதியாக லாபங்கள் ஏற்படும். இதுவரை இருந்த பணத் தட்டுப்பாடுகள் நீங்கும் மாதமாக இருக்கும். உத்தியோகம் ரீதியாக அனுகூலங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். மேலும் தொழில் அபிவிருத்தி செய்ய நினைப்போரும், புதிதாக தொழில் துவங்க இருக்கும் மாதமாகவும் இருக்கும்.

உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீர தீர மன பாரங்கள் சரியாகும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் இது நடக்கவில்லை அது நடக்கவில்லை என்று நீங்கள் வருத்தப்பட்டதற்கு முடிவு கிடைக்கும் காலமாக இருக்கும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதற்கான உன்னதமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகள் படிப்பு ரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள். சுப விரயங்கள் மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.

பல ஆண்டுகளாக நீங்கள் வாங்க நினைத்திருந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் நன்மைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும். உங்கள் முன்னேற்றம் பிறரால் பேசப்படும் அளவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்

மன அழுத்தத்தைத் தீர்க்கும் காலகட்டமாக ஆவணி மாதம் இருக்கும், உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும் காலகட்டமாக இருக்கும். தொழில் செய்வோர் தைரியமாக அபிவிருத்தி செய்யலாம், மேலும் புதிதாகத் தொழில் துவங்குவோருக்கும் மிகச் சிறந்த காலம் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

சுப காரியங்கள் சார்ந்த விஷயங்களில் பல ஆண்டுகளாக இருந்த தடைகள் நீங்கும். மன அழுத்தம், பாரம் அனைத்தும் குறைந்து மன நிம்மதி அதிகரித்துக் காணப்படுவீர்கள். தனிப்பட்ட செல்வாக்கு உயர்ந்து உறவினர்களால் மெச்சப்படுவீர்கள். குழந்தைகள் படிப்பு ரீதியாக இருந்த கவலைகள் மறையும். பூர்விகச் சொத்துகள் ரீதியாக பல ஆண்டுகள் இருந்த பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

பிள்ளைகள் விஷயத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த சுப காரியங்கள் நடக்கப் பெறும். ஆனாலும் பெற்றோர் – பிள்ளை உறவில் மனக் கசப்புகள் ஏற்படும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அனுகூலத்தை ஏற்படுத்தும். நரசிம்மர் வழிபாடு 6 இல் இருக்கும் இராகுவின் தாக்கத்தைக் குறைக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் அரசுத் துறை சார்ந்து இருப்பவர்களுக்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.
பலரால் மெச்சப்படும் வாழ்க்கையினை வாழ்வீர்கள். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு பிரச்சினைகளை விலக்கிக் கொடுக்கும்.

தனுசு

ஏற்றத்துக்கு உண்டான காலகட்டமாக இருக்கும், மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும் நற் செய்திகள் உங்களைத் தேடி வரும். ஆடி மாதத்தில் படாத பாடு பட்டு இருப்பீர்கள், அவை அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உங்கள் வீட்டு வாசலில் எட்டிப் பார்க்கும் காலகட்டம் இது.தொழில்ரீதியான மற்றும் உத்தியோகம் ரீதியான டென்சன்கள் என அனைத்தையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும், நீங்கள் திறமையுடன் செயல்பட்டு பிரச்சினையில் இருந்து மீள்வீர்கள்.

தெய்வ தரிசனங்கள் ரீதியாக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். விஷ்ணு வழிபாடு செய்தல் விஷ்ணு ஸ்லோகங்கள் சொல்லுதல் அனுகூலங்களை ஏற்படுத்தும். அஜீரணக் கோளாறுகள், வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக மேல் அதிகாரிகளால் படாதபாடு பட்டு இருப்பீர்கள், அவை அனைத்தும் நீங்கும் காலகட்டமாக இருக்கும்.

எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு ஏற்படும். பதவி உயர்வு, வேலை ரீதியாக இடமாற்றம் என நினைத்த காரியங்கள் ஈடேறும் மாதமாக இருக்கும். சுப காரியங்கள் நீங்கள் நினைத்தமாதிரியே ஈடேறும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களுடன் வாக்கு வாதங்கள் வேண்டாம். மனதில் இருக்கும் பாரங்கள் குறைந்து லேசாக உணர்வீர்கள். பயம் இல்லாமல் நிம்மதியுடன் இருப்பீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் குடும்பத்தில் கௌரவம் ஏற்படும்.

மகரம்

ஆவணி மாதத்தில் சனி ஜென்மத்திலும், சூரியன் எட்டாம் இடத்திலும் உள்ளது. அதனால் எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது. விநாயகர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, அனுமன் வழிபாடு செய்தல் நன்மை பயக்கும். அதிலும் குறிப்பாக அனுமன் வழிபாட்டிற்காக வடை மாலை சாத்துதல், வெற்றிலை மாலை சாத்துதல் செய்தல் என ஏதாவது ஒரு முக்கிய வழிபாடு செய்தல் அனுகூலத்தை ஏற்படுத்தும்.

வீடு, மனை சார்ந்த இடப் பிரச்சினைகளில் இருந்த மோசமான சூழ்நிலை படிப்படியாக மாறுவதைக் கண்கூடப் பார்ப்பீர்கள். தொழில் அபிவிருத்தி, தொழிலில் லாபம், உத்தியோக ரீதியான பணி உயர்வு, சம்பள உயர்வு என அனைத்தும் மிகச் சிறந்த காலகட்டமாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடன் இருக்கும்பட்சத்தில் மிகச் சிறந்த ஆதாயத்திற்கு இட்டுச் செல்வதாக அமையும். அடி வயிறு, நரம்புக் கோளாறு, உடல் கோளாறு, மன அழுத்தக் கோளாறு என உடல் ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும் உடல் சார்ந்த பிரச்சினைகள் விரயச் செலவுகளுக்கு இட்டுச் செல்லும். கோபம் உங்களை சட்ட சிக்கல்கள் உட்பட பல பெரும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும். நண்பர்கள் உடனான உறவில் கோபத்தால் விரிசல் ஏற்படும்.

கும்பம்

யோக பலன்கள் நிறைந்த மாதமாக ஆவணி மாதம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான சிறு பிரச்சினைகள் பெரிய அளவிலான பிளவுகளுக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும் காலகட்டமாக இருக்கும். உத்தியோகம் ஏற்றம் பெறும். வெளி வட்டாரத்தில் உங்கள் நிலை மேம்பட்டுக் காணப்படும்.

குழந்தைகள் கல்வி ரீதியாக ஏற்றம் பெற்றுக் காணப்படுவார்கள். குடும்ப விஷயத்தில் அந்நியர் தலையீடு கூடாது. அதேபோல் பிறர் குடும்ப விஷயத்தில் நாம் தலையிடவே கூடாது. இரகசியங்களை இரகசியமாகவே வைத்திருத்தல் மட்டுமே நல்லது. பூமி சார்ந்த விஷயங்களில் மன உளைச்சலை ஏற்படுத்திய பிரச்சினைகள் சட்டென்று முடிவுக்க வரும்.

தொழில் ரீதியான அபிவிருத்தியை துணிந்து செய்யுங்கள், நீங்கள் எதிர்பாராத லாபத்தினைக் கொடுக்கும். அரசுப் பணி பெற காத்திருந்தவர்களுக்கு நற் செய்தி தேடிவரும். உத்தியோகஸ்த்தில் இருக்கும் சிக்கல்கள் தீர தீர மனக் கவலைகள் குறையும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க கையில் இருக்கும் ஒரே ஆயுதம் பொறுமை மட்டும் தான்.

காதல் செய்வோருக்கு பிரிவு ஏற்படும் காலகட்டமாக இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்போருக்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். சிவ வழிபாடு செய்து வந்தால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் சரியாகும்.

மீனம்

நீண்ட நாட்களுக்குப் பின் அனுகூலங்கள் ஏற்படுவதற்கான காலகட்டமாக ஆவணி மாதம் இருக்கும். தொழில் ரீதியாக புதிய தொழில் செய்ய நினைப்போரும், அபிவிருத்தி செய்ய நினைப்போரும் கொஞ்சமும் யோசிக்காமல் துணிந்து செயல்படலாம். வேலைரீதியாக நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் சரியாகி, மன நிம்மதி மற்றும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள், பணப் புழக்கம் முந்தைய மாதங்களைவிட அதிகரிக்கும்.

தாய்வழி தந்தைவழி உறவுகளுடன் இருந்த பகை மாறும். சொத்துகள் ரீதியாக ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் சரியாகி நிலைமை சாதகமாக அமையப் பெறும். மனதில் இருக்கும் பாரங்கள் குறைந்து உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவீர்கள். தொழில் கூட்டாளிகளுடன் உடன்படிக்கை செய்யும்போது கவனத்துடன் செயல்படுதல் வேண்டும். வீடு மாற்றம் ஏற்படும், புதிதாக வீடு கட்ட நினைப்போரின் கனவு நனவாகும் காலகட்டமாக இருக்கும்.

வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குவீர்கள். திருமண ரீதியாக தடைபட்டு இருந்த அமைப்புகள் அனைத்தும் சரியாகும். பிள்ளைகள் கல்வியில் மேம்பட்டும் உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள். விநாயகர் வழிபாடு சகல விதத்திலும் நன்மை பயக்கும்.

#Astrology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version