அரசியல்

ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி!

Published

on

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளுங்கட்சியின் சார்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதி பதவிக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்வார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளின் சார்பில் டளஸ் அழகப்பெருமவை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ‘டளஸ் ஜனாதிபதி, சஜித் பிரதமர்’ என்ற பேச்சு வெற்றியளிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி பதவிக்கு இரு முனை போட்டியே நிலவக்கூடும்.

டளஸ் மற்றும் சஜித் தரப்பு ஓரணியில் இணைந்து களமிறங்காவிட்டால் , ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க இலகுவில் வெற்றிபெறுவதற்கான சாத்தியமே அதிகம் காணப்படுகின்றது. எனவு, டளஸ் களமிறங்கினால் மொட்டு கட்சி வாக்குகள் இரண்டாக உடையும், அது ரணிலின் வெற்றி வாய்ப்பில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.

இந்நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே தமது கட்சி ஆதரவு வழங்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசேட அறிக்கை மூலம் இன்று அறிவித்துள்ளார். எனினும், இது மொட்டு கட்சியின் முடிவு அல்ல என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் சிலர் அறிவித்துள்ளனர். இதனால் மொட்டு கட்சிக்குள் முறுகல் நிலை உருவாகியுள்ளது.

16 இற்கும் மேற்பட்ட மொட்டு கட்சி எம்.பிக்கள் டளசுக்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

மறுபுறத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்து போடுவதற்கான பேரம் பேசும் படலமும் ஆரம்பமாகியுள்ளது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

டளஸ், சஜித் கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், 19 ஆம் திகதி வேட்பு மனு தாக்கலின் பின்னரே கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில், ஜனாதிபதியாக கூடாது, அவர் பிரதமர் பதவியில் இருந்தும் விரட்டப்பட வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் – மக்களின் கோரிக்கை.

அந்த கோரிக்கையை ஏற்று, தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளும், சுயாதீன அணிகளும் ஒன்றிணையும் பட்சத்தில் எதிரணியால் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான சாத்தியமே அதிகம்.

☎️ ஐக்கிய மக்கள் சக்தி – 50
🏠 இலங்கை தமிழரசுக்கட்சி – 10
⏱ தேசிய மக்கள் சக்தி – 03
🚲 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 02
🐟 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 01
✍️🐓 சுயாதீன உறுப்பினர்கள் 30
(இ.தொ.கா., தேசிய காங்கிரஸ், ரத்தன தேரர் உட்பட)
🌷 டலஸ், டிலான் உட்பட 16 இற்கும் மேற்பட்ட எம்.பிககள்

அதேவேளை, அரச பங்காளிக்கட்சிகளான ஈடிபிடி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பவற்றின் உறுதியான – இறுதியான நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், ரணிலை மேற்படி கட்சிகள் ஆதரிக்கும் என நம்பப்படுகின்றது.

#SRiLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version