அரசியல்

பெரும்பான்மையுடன் களமிறங்கும் ரணில்! – புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

Published

on

பகைமை மறந்து பங்காளியாக மைத்திரி சம்மதம்
நிமல் உட்பட சு.க. எம்.பிக்கள் மூவருக்கு அமைச்சு பதவி
விமல், வாசு, கம்மன்பில பிரதமருடன் இன்று சந்திப்பு
இ.தொ.காவுக்கும் முக்கிய பதவி
புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பிரதமருக்கு, கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை , ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (16) முற்பகல் நேரில் சந்தித்து, அரசின் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடவுள்ளனர். அமைச்சு பதவிகளை ஏற்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.
சுதந்திரக்கட்சியின் சார்பில் நிமல் சிறிபாலடி சில்வா உட்பட மூவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து, இறுதியானதொரு முடிவை எடுப்பதற்கு சு.கவின் மத்திய குழுவும் இன்று கூடவுள்ளது.
புதிய அரசுக்கு ஆதரவில்லை, அமைச்சு பதவிகள் ஏற்கப்படாது என சுதந்திரக்கட்சி முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் ரணிலை ஆதரிக்க முடிவெடுத்தனர். இதனால் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரச பங்காளியாவதற்கு சு.க. இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 10 கட்சிகளின் பிரதிநிதிகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். எனினும், அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்க அக்கட்சிகளின் பிரதிநிதிகள் முடிவெடுத்துள்ளனர். 10 கட்சிகளின் பிரதிநிதிகளும், பிரதமருடன் இன்று பேச்சு நடத்தவுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், புதிய அரசில் இணைந்து, ஜனாதிபதி, பிரதமரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. அமைச்சரவையிலும் முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, புதிய அமைச்சரவை இன்று (16) நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. அதன்பின்னர் பொருளாதார வேலைத்திட்டம்தொடர்பில் பிரதமர் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் நாளை (17) முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது பிரதி சபாநாயகர் தேர்வுக்கு வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை என்றே நம்பப்படுகின்றது. பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் வேட்பாளர் ஏகமனதாக தெரிவாகக்கூடும். மொட்டு கட்சி உறுப்பினர் பின்வாங்கக்கூடும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லையென ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டாலும், தற்போது அவர் சாதாரண பெரும்பான்மையைவிடவும் அதிக ஆதரவை திரட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான 21 ஆவது திருத்தச்சட்டமும் விரைவில் நாடாளுமன்றம் வரவுள்ளது.
ஆர்.சனத்
#SriLankaNews #Artical

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version