அரசியல்

‘இலங்கை அரசியலை ஆக்கிரமித்துள்ள எண்மர்’

Published

on

இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில், எட்டு பேர் மாத்திரமே இரண்டு தேர்தல் முறைகளிலும் சபைக்கு தெரிவாகிய அனுபவத்தை கொண்டுள்ளனர்.

இலங்கையில் 1947 முதல் 1977 வரை தொகுதிவாரியான தேர்தல் முறைமையே அமுலில் இருந்தது. 1978 அரசமைப்பு ஊடாக விகிதாசார விருப்பு வாக்கு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. 1989 முதல் 2020 வரை நடைபெற்ற அனைத்து பொதுத்தேர்தல்களும் விகிதாசார முறையிலேயே இடம்பெற்றுள்ளது.

1970 , 1977 மற்றும் 83 -85 காலப்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களில் (தொகுதிவாரி) வெற்றி பெற்று, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த அரசியல் வாதிகளுள், தற்போதைய 9 ஆவது நாடாளுமன்றத்திலும் எட்டு பேர் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

அவர்கள் அரச கட்டமைப்பிலும், கட்சிகளிலும் முக்கிய பதவிகளை வகித்துள்ளனர். அத்துடன், அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழ்கின்றனர்.

🛑 1. மஹிந்த ராஜபக்ச – 1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சபைக்கு தெரிவானார்.
1977 இல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். 1989 இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சபைக்கு வந்தார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என அரசியலில் அத்தனை உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை வகித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்பட்டார். தற்போது மொட்டு கட்சியின் தலைமைப்பதவி அவர் வசமே உள்ளது.

🛑2. ரணில் விக்கிரமசிங்க – 1977 ஜுலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் பியகம தொகுதியில் – கன்னி தேர்தலை எதிர்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
1978 இல் புதிய அரசியல் யாப்பு இயற்றப்பட்ட பின்னர், சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால் பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது. இத்தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கினார். 86 ஆயிரத்து 477 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
1994 முதல் அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். கொழும்பு மாவட்டத்தில் 5 பொதுத்தேர்தல்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றும் சாதனை படைத்தவர். 5 தடவைகள் பிரதம அமைச்சர் பதவியை வகித்துள்ளார். 2005 ஜனாதிபதி தேர்தலில் களம் கண்டார். ஜனாதிபதி பதவியைதவிர அரசியலில் ஏனைய அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.
42 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக நாடாளுமன்றில் அங்கம் வகித்த ஒரேயொரு அரசியல்வாதி. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியிலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கின்றார்.

🛑3. இரா. சம்பந்தன் – 1977 இல் நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திருமலை தொகுதி ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்தார். அதன்பின்னர் 3 தேர்தல்களில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், 2001 இல் நடைபெற்ற தேர்தல் முதல் கடந்த தேர்தல்வரை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை வகித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டுவருகின்றார். இலங்கை நாடாளுமன்றத்தில் 2 ஆவது தமிழராக எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்துள்ளார்.

🛑 4. வாசுதேவ நாணயக்கார – 1970 , நடைபெற்ற பொதுத்தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் களமிறங்கி வெற்றிபெற்றார். 1977 தேர்தலில் தோல்வி. 1982 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். 1989 முதல் இற்றைவரை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார். அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை வகித்துள்ளார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப்பதவியை வகிக்கின்றார்.
🛑5. பஸில் ராஜபக்ச – 1977 இல் நடைபெற்ற தேர்தலில் சுதந்திரக்கட்சின் சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள முல்கிரிகம தேர்தல் தொகுதி ஊடாக நாடாளுமன்றம் தெரிவானார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சங்கமித்தார்.

🛑2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு சார்பாக பிரச்சாரம் செய்தார். 2007 தேசிய பட்டியல் ஊடாக சபைக்கு தெரிவானார். 2010 தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இம்முறை தேசியப் பட்டியல் ஊடாக சபைக்கு தெரிவானார். நிதி அமைச்சு பதவியையும் வகித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகத் தலைவராகவும் கருதப்படுகின்றார்.

🛑 ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை வகிக்கும் மஹிந்த யாப்பா அபேவர்தன, சபை முதல்வர் பதவியை வகிக்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தன, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோர் 83 – 85 காலப்பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றுள்ளனர். 1989 முதல் பொதுத்தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றும் உள்ளனர். எனவே, இவர்களும் இரு முறைகளில் தேர்தலை எதிர்கொண்ட அனுபவத்தை பெற்றவர்கள்.
1977 தேர்தலில் தினேஷ் குணவர்தன போட்டியிட்டிருந்தாலும் வெற்றிபெறவில்லை. எஸ்.பி. திஸாநாயக்கவும் 77 இல் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றிபெறவில்லை.

70 -77 – 83 களில் நாடாளுமன்றம் தெரிவாகி, தற்போதைய நாடாளுமன்றிலும் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளே நாடாளுமன்ற கட்டமைப்பில் உயர் பதவிகளை வகித்துள்ளனர். வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபாலடி சில்வா, ஜோன் செனவிரத்ன உள்ளிட்டவர்களிலும் 70-77 காலப்பகுதியில் அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தாலும் 1989 பொதுத்தேர்தலில் போட்டியிட்டே, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர்.

ஆர்.சனத்

#SriLanka #Artical

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version