அரசியல்

இம்ரான் கானும் இலங்கையும்!

Published

on

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் அரியணையேறி – அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவார் எனக் கருதப்பட்ட இம்ரான் கான், நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பில் தோல்வி கண்டதால் பதவியை இழந்துள்ளார்.

தலைசிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்பட்ட இம்ரான் கான், ஆடுகளத்தில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டவராக இருந்திருந்தாலும் – அரசியல் களத்தில் தோற்றுவிட்டார். இது அவரின் அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 174 உறுப்பினர்கள், இம்ரான் கானுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கைவிரிப்பு, கடைசி நேர கழுத்தறுப்பு, கடிசிதாவல் என இம்ரான் கானுக்கு எதிராக அத்தனை அரசியல் சூழ்ச்சிகளும் அரங்கேறின. பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பிரதமர் இவராவார்.

பாகிஸ்தானில்போன்றே இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியே இம்ரான்கான்மீதான நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது எனலாம்.

பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி என்பது உச்ச மட்டத்திலேயே உள்ளது. பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்ததுபோல, பிரதமர் மஹிநத ராஜபக்சவுக்கு எதிராக இலங்கையிலுள்ள எதிரணியும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க தயாராகிவருகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. பாகிஸ்தானை பொறுத்தமட்டில் நாடாளுமன்ற ஆட்சி முறைமையே நிலவுகின்றது. எனவே, பிரதமர் பதவியே அங்கு முக்கியம். அந்த பதவியில் இருப்பவரை நீக்கினால் புதிய ஆட்சியை அமைக்கலாம்.

ஆனால் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே நீடிக்கின்றது. அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நாடாளுமன்றத்துக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும், அது நீக்கப்பட்டு 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைம மேலும் வலுப்படுத்தப்பட்டது.

இலங்கையில் அரசை கவிழ்க்க வேண்டுமானால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்து 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை நிறைவேற்றினால் – இலக்கை அடையமுடியும். ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருப்பதால் புதிதாக ஆட்சிக்கு வரும் தரப்பால் சுதந்திரமாக இயங்க முடியாது.

அதனால்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கோஷம் கோலோச்சியுள்ளது. இந்த விடயத்தை வலியுறுத்தியே போராட்டங்களும் வெடித்துள்ளன. மக்களின் கோரிக்கையை ஏற்று பதவி விலகுவதற்கு கோட்டாபய ராஜபக்ச தயாரில்லை.

அப்படியானால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கான ஒரே வழி குற்றப்பிரேரணை. அவ்வாறானதொரு பிரேரணையை ஜனாதிபதிக்கு எதிராக முன்வைப்பதற்கான முஸ்தீபுகளும் இடம்பெற்றுவருகின்றன. நம்பிக்கையில்லாப் பிரேரணைபோன்று அல்ல,

குற்றப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன. அதனை பயன்படுத்தி கோட்டாவை பதவி நீக்கம் செய்வதென்பது சாத்தியமற்ற விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

குற்றப் பிரேரணையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை எம்.பிக்கள் கையொப்பமிட வேண்டும் (150). அதற்கு குறைவான எண்ணிக்கையிலான கையொப்பம் இருந்தால் குற்றப் பிரேரணையை சபாநாயகர் நிராகரிக்க முடியும்.
அத்துடன், மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினராவது – அதாவது 113 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுகூட குற்றப்பிரேரணையை சபாநாயகரிடம் ஒப்படைக்கலாம்.

ஆனால் – மேற்படி குற்றப்பிரேரணையில் ஏற்றுக்கொளளக்கூடிய விடயம் அல்லது விடயங்கள் உள்ளன, அது தொடர்பில் அல்லது அவை தொடர்பில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என சபாநாயகர் கருதினால் அதனை ஏற்பார். இல்லையேல் நிராகரிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் போராட்டம் தீவிரமடையும்பட்சத்தில், மகாநாயக்க தேரர்கள் அணிதிரண்டு கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், கோட்டா பதவி விகலாம். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த நாடாளுமன்றம் கலையும்வரை அரசியல் நெருக்கடி தொடரவே செய்யும். அதனால் பாதிக்கப்படபோவது அப்பாவி மக்களே!

#SriLanka #Pakistan

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version