கட்டுரை

பாராளுமன்றத்தில் ⅔ பலத்தை இழக்கிறது அரசு! – இன்னும் 12 எம்.பிக்கள் வெளியேறினால் ஆட்சிக்கும் ஆபத்து!!

Published

on

அரச கூட்டணிக்குள் மூண்ட உள்ளக மோதல், இன்று பெரும் அரசியல் போராக உருவெடுத்து, முச்சந்தியில் வந்து நிற்கின்றது.

கூட்டணியின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கடும் சொற் சமர் இடம்பெற்று வருவதுடன், இரு தரப்பினருமே சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்துவருகின்றனர். இதனால் தென்னிலங்கையில் ‘அரசியல் புயல்’ மையங்கொண்டுள்ளது எனலாம்.

ராஜபக்சக்களின் எழுச்சிக்காக ‘தேசப்பற்று’ எனும் அலகு குத்தி, ‘அரசியல் காவடி’ தூக்கிய விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள், இன்று மௌன விரதத்தை முடித்துக்கொண்டு, ஏதோ தெய்வ குத்தம் நிகழ்ந்துவிட்டதுபோல ஊடக சந்திப்புகளை நடத்தி ஒப்பாரி வைக்கின்றனர். பரிகாரம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதெனவும் ஆருடம் கூறுகின்றனர்.

ஏதோ, அமெரிக்கா சதி, மேற்லகும் சூழ்ச்சி, சமஷ்டி, நாடு பிளவுபடபோகின்றது, என்றெல்லாம் பல்லவிபாடி அரசியல் களத்தில் தமக்கான இருப்பை தக்கவைத்துக்கொண்ட இவர்கள், இனிவரும் காலப்பகுதியிலும் அதே யுக்தியைக் கையாளக்கூடும். இதன் ஓர் அங்கமாகவே அமெரிக்க பிரஜையிடம் இருந்து நாட்டை சுதந்திரம் பெற வைப்பதற்கான போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என்ற அறிவிப்பு அவசரமாக விடுக்கப்பட்டுள்ளது.

சரி, இவர்களின் சண்டை ஒருபுறம் இருக்கட்டும். அதனால் மக்களின் மண்டை உடையபோவதில்லை. இருந்தாலும் பங்காளிகளை பகைத்துக்கொண்டதால் பாராளுமன்றத்தில் தமக்கிருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விசேட பெரும்பான்மை தேவைப்படும்பட்சத்தில் ஏனைய தரப்புகளுடன் பேரம் பேச வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது, கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலேயே எதிர்கொண்டது. தேசிய ரீதியில் 59.09 சதவீத வாக்குகளைப்பெற்ற அக்கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் உட்பட 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கிய டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈபிடிபி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரத்தன தேரர் போட்டியிட்ட எமது மக்கள் சக்தி, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன, தேர்தலின் பின்னர் மொட்டு அரசுடன் ஒட்டிக்கொண்டன. சில மாவட்டங்களில் மட்டும் தனித்து போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு, யாழ். மாவட்டத்தில் மட்டுமே ஒரு ஆசனம் கிட்டியது. இதன்பிரகாரம் 151 ஆசனங்கள் (அதாவது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன்) சகிதம் மொட்டு கட்சி அரியணையேறியது.

இதற்கு மேலதிகமாக புத்தளம் மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் தேசிய கூட்டணியும் (ஒரு ஆசனம்) அரசுக்கு நேசக்கரம் நீட்டிவருகின்றது. அதேபோல எதிரணி எனக் கூறிக்கொண்டாலும் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ரவூப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் வாக்கெடுப்புகளின்போது அரசுக்கு ஆதரவு வழங்கிவருகின்றன. (கட்சித் தலைவர்களைவிதர) டயானா, அரவிந்தகுமார் ஆகியோரும் அரசு பக்கம் உள்ளனர்.

அந்தவகையில் நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக 160 பேர் செயற்பட்டுவந்தனர். ஆதரவு பட்டியல்……

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 145
ஈபிடிபி – 02
தேசிய காங்கிரஸ் – 01
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01
எமது மக்கள் சக்தி – 01
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 01
முஸ்லிம் தேசியக் கூட்டணி – 01
முஸ்லிம் காங்கிரஸ் – 04
மக்கள் காங்கிரஸ் – 02
அரவிந்தகுமார் – 01
டயானா – 01

எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதென்பது சவாலுக்குரிய விடயமாக இருக்கவில்லை. எனினும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதால் அரசின் மூன்றிலிரண்டு பலத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவ்விருவரும் இல்லாமல் தனக்கு அரசுடன் ‘டீல்’ இல்லை என்பதை வாசுதேவ நாணயக்காரவும் அறிவித்துவிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, தேசிய காங்கிரஸ், ‘யுதுகம’ கட்சி ஆகியவற்றின் எம்.பிக்களும் விமல், கம்மன்பில தரப்புடன்தான் நிற்கின்றன.

அந்தவகையில் தற்போது அரசுக்கு எதிராக 25 பேர் நிற்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த பட்டியல்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 14 (நா.உ)
தேசிய சுதந்திர முன்னணி – 04
ஜனநாயக இடதுசாரி முன்னணி – 01
பிவிதுரு ஹெல உறுமய – 01
கம்யூனிஸ் கட்சி – 01
லங்கா சமசமாஜக்கட்சி – 01 (தேசியப்பட்டியல்)
தேசிய காங்கிரஸ் -01
‘யுதுகம’ – 01
எமது மக்கள் சக்தி – 01

ஆக அரசின் 153 (எதிரணி முஸ்லிம் எம்.பிக்கள் இன்றி) என்ற எண்ணிக்கையில் இருந்து 25 பேரை ஒதுக்கிவிட்டால், தற்போது அரச பக்கம் 128 பேர்தான் நிற்கின்றனர். சிலவேளை, அரசு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவை பெற்றால்கூட அந்த எண்ணிக்கை 135 ஆக உயரக்கூடும். அப்படியானால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தக்க வைக்க அரசுக்கு இன்னும் 15 ஆசனங்கள் தேவை. சிலவேளை சுதந்திரக்கட்சியில் உள்ள சிலரை வளைத்துபோட்டால்கூட 150 உடன் சாத்தியப்படாது. எனவே, எதிரணியை உடைக்க வேண்டும். அதற்கான நகர்வு தற்போது சாத்தியமா என்ற வினா எழுகின்றது.

எதிரணியில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவு வழங்காத நிலையில், அரசில் இருந்து இன்னும் 16 பேர் விலகிவிட்டால் அரசு சாதாரணப் பெரும்பான்மையையும் இழந்துவிடும் அபாயம் உள்ளது. விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே அரச எதிர்ப்பு பக்கத்தில்தான் உள்ளார். சுசில் பிரேமஜயந்தவும் அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.

எனவே .எதிரணிக்கு இன்னும் 14 ஆசனங்களே தேவை, அரசின் சாதாரணப் பெரும்பான்மையையும் தகர்க்க. விதுர விக்ரமநாயக்க மற்றும் தொலவத்த ஆகியோரும் அதிருப்தியிலேயே உள்ளன. அந்தவகையில் 12 பேர் வெளியேறினால், அரசு சாதாரண பெரும்பான்மையை இந்துவிடும்.

சிலவேளை, எதிரணிகள் விசேட வியூகமொன்றை அமைத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை அரசுக்கு எதிராக கொண்டுவந்தால் அரசு கவிழும். எதிரணிகள் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் குறைவு.

அதேவேளை, சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சரவையில் நீடிக்கின்றனர். விமல் தரப்பில் ஒருவரும் இராஜாங்க அமைச்சு பதவியை வகிக்கின்றார். இவர்கள் எல்லாம் அரசில் இருந்து வெளியேறினால் மட்டுமே அரசியல் நெருக்கடி தலைதூக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை விடயத்தில் மட்டுமே சிக்கல் ஏற்படும்.

தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இ.தொ.கா. பயன்படுத்திக்கொள்ளவில்லை. நுவரெலியாவுக்கு இரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பாக கைத்தொழில் அமைச்சை பயன்படுத்தி, பல திட்டங்களை முன்னெடுக்க திட்டம் வகுக்க வேண்டும்.

ஆர். சனத்

#SriLanka

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version