கட்டுரை

பட்டுப்பாதை உறவில் விரிசல்!

Published

on

இலங்கை மற்றும்  சீனாவுக்கிடையிலான நெருக்கமான – இறுக்கமான உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எனினும், தங்களுக்கிடையிலான பந்தம் பலமாகவே இருப்பதாகவும், எவ்வித இராஜதந்திர முரண்பாடுகளும் இல்லை எனவும் இருநாடுகளும் கூறி வருகின்றன.

இவ்விரு நாடுகளும் உலக அரங்கில் அறிவிப்புகளை விடுத்துவந்தாலும், உள்ளுக்குள் பகைமை கொதித்துகொண்டே இருக்கின்றது.

உரத்தில் ஆரம்பமான பிரச்சினை, முதலீட்டு உறவுகளை முறித்துக்கொள்ளும் அளவுக்கு உக்கிரமடைந்துள்ளது.

பண்டைய காலம் தொட்டே இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் வர்த்தகம் உட்பட ஏனைய விடயங்களிலும் சிறந்த நல்லுறவு இருந்து வருகின்றது.

போர்க் காலத்திலும், அதன் பின்னரும் கொழும்புக்கு பீஜிங் எல்லா வழிகளிலும் நேசக்கரம் நீட்டியது.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கடன்களையும், நன்கொடைகளையும் வாரி வழங்கியது.

அதுமட்டுமல்ல ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை ஆகியவற்றில் இலங்கைக்கு பக்கபலமாக இருந்ததும் சீனாதான்.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைகளை வலுவிழக்கச் செய்வதற்கும் சீனாவே தலைமை வழங்கும்.  இதனால் ராஜபக்ச அரசு சீனாவை முழுமையாக நம்பியது.

இதனை பயன்படுத்தி இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியது. மெல்லென கடல் வலையையும் விரித்து – விஸ்தரித்துக்கொண்டது. இதனால் ராஜபக்ச அரசுமீது டில்லி கடும் அதிருப்தியில் இருந்தது.

எனவே, சீனாவுக்கு ஒரு திட்டத்தை வழங்கினால் மற்றுமொரு திட்டத்தை டில்லிக்கே வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மஹிந்த ஆட்சி கவிழ்ந்த பின்னர் நல்லாட்சி அரசு துறைமுக நகர் திட்டத்தை இடைநிறுத்தினாலும் பின்னர் அதனை ஆரம்பித்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனாவுக்கு வழங்கியது. அந்தளவுக்கு சீன அழுத்தம் – ஆதிக்கம் காணப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால், மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.

சீனாவும் தனது மகிழ்ச்சியை வெளியிட்டது.

ஆனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன பசளை தரமற்றது, தீங்கு விளைவிக்ககூடிய பற்றீரியாக்கள் இருப்பதால்  அவற்றை இலங்கையில் இறக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இலங்கை அரச நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையை சீன நிறுவனம் ஏற்க மறுத்தது. சர்வதேச மத்தியஸ்தத்தையும் கோரியது.  அதனை இலங்கை ஏற்க மறுத்தது.

எனினும், சீன நிறுவனத்தின் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள்தான் இன்னும் சுற்றித் திரிகின்றது.

இந்நிலையில், இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்து சீன தூதரகம் பதிலடி கொடுத்தது.

இதற்கு வெளிவிவகார அமைச்சு ஆட்சேபனையை வெளியிட்டிருந்தாலும், சீன தூதுவரை அழைத்து விளக்கம் கோரவில்லை.

மாறாக சீனத் தூதரகத்துக்கு சென்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சருக்கு விளக்கமளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இது இராஜதந்திர மட்டத்தில் இலங்கைக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும்.

இலங்கையின் அரச வங்கியை கறுப்பு பட்டியலில் இணைத்ததும், கப்பலை திருப்பி கொண்டுசெல்ல மறுப்பதும் சீனாவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

அதுமட்டுமல்ல, மற்றுமொரு பதிலடியையும் சீன கொடுத்துள்ளது.

வடக்கில்  மூன்று தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை  இடைநிறுத்துவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா சென்றுள்ள நிலையில் சீனா இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளமை குறித்தும் அதிருப்திகள் வெளியாகியுள்ளன.

மூன்றாவது தரப்பொன்று பாதுகாப்பு தொடர்பில் முன்வைத்த விடயங்கள் காரணமாக Sino Soar Hybrid Technology சீன நிறுவனம் இந்த செயற்றிட்டத்தை இடைநிறுத்தியதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 03 செயற்றிட்டங்களையும் கைவிட்ட சீன நிறுவனம் மாலைதீவுகளிலுள்ள 12 தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கத்துடன் கடந்த 29 ஆம் திகதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டத்தை ஆரம்பிக்க சீன நிறுவனம் தயாராகியிருந்தது.

இலங்கைமீதான அதிருப்தியை வெளியிடும் விதத்திலேயே சீனா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என இராஜதந்திர மட்டத்தில் அச்சம் வெளியிடப்படுகின்றது.

அனைத்துலக மட்டத்தில் சீனாவின் உதவி இலங்கைக்கு அவசியம் என்பதால் அந்நாட்டை அனுசரித்து செல்லவே இலங்கை முற்படும்.

#SriLanka

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version