கட்டுரை

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சிங்களக் குடியேற்றம் -அ.நிக்ஸன்-

Published

on

13 ஐ ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்க முடியாதென்பதற்கு 2009 இன் பின்னர் அவசர அவசரமாகவும் நன்கு திட்டமிடப்பட்டும் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிறந்த உதாரணம். இதனை அமெரிக்க இந்திய அரசுகளுக்குத் தமிழ் சட்டமேதைகளினால் சொல்ல முடியுமா? அப்படிச்  சொல்லியிருந்தாலும் கிடைத்த பதில்தான் என்ன? சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்புகள் பற்றி ஜெனீவா அறிக்கையில் ஒரு வரர்த்தையேனும் வெளிவரவில்லையே– 

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசினால் அபகரிக்கப்பட்ட காணிகள் பற்றிய விபரங்கள் உங்களிடம் இருக்கின்றதா? அவ்வப்போது நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் நிகழ்த்திய உரைகளிலும் மற்றும் சில பொது அமைப்புகளின் தகவல்களின் படியும் எத்தனை ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய முடியும். அத்துடன எத்தனை புத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன, எத்தனை புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணி அதிகாரங்கள் இருந்தாலும். வுடமாகாணத்தில் செயற்பட்ட மாகாண சபை நிர்வாகத்தை மீறிக் காணிகள் அபகரிக்கப்பட்டதை இக் கட்டுரையாளர் வெளிப்படுத்தியிருக்கிறார். விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது நிர்வாகம் செயத் தெரியாமல் பல விடயங்களை இழந்துவிட்டதாகப் பல கதைகள் உலாவுகின்றன.

ஆனால் அந்தக் கதைகளைச் சொல்லிக் கொண்டு திரியும் பிரதிநிதிகள் யார்? இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பு 1948 இல் இருந்து எப்படிச் செயற்பட்டு வருகின்றது என்பதை அறியாதவர்கள். அல்லது தெரிந்தும் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பைப் புனிதப்படுத்தித் தமிழர்களுக்குக் கிடைத்த அதிகாரத்தையும் பயன்படுத்தத் தெரியாது என்று கூறி, 13 உங்களுக்குப் போதுமெனக் கூறுகின்ற புதுடில்லியைத் திருப்திப்படுத்தும் நபர்கள்தான் அந்தப் பிரதிநிதிகள்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது ஆக 750 மலசலகூடங்களை மாத்திரமே தன்னால் கட்டிக் கொடுக்க முடிந்ததென சிவநேசத்துரை சந்திரகாந்தன் அப்போது கூறியிருந்தார்.

உண்மையில் யேசுநாதர் மீண்டும் பிறந்துவந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாண சபைகளில் முதலமைச்சராக இருந்தாலும், இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு தனது அதிகார மையத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணத்துக்கு ஆளுநராக இருப்பவர், யேசுநாதரையும் விஞ்சிய சர்வ வல்லமை கொண்டவராகவே செயற்படுகிறார் என்பது தமிழ்த்தேசியக் கட்சிகளில் உள்ள சட்டமேதைகளுக்குத் தெரியாததல்ல. அதாவது ஜனாதிபதியால் நியமனம் பெறும் ஆளுநர் தமிழராக இருந்தாலும் அவர் ஜனாதிபதியால் இயக்கப்படும்  கருவி மாத்திரமே.வடக்கு கிழக்கில் உள்ள சிறிய ஒரு வீதியின் குழி ஒன்றைச் சீர்செய்யக் கல் ஒன்றைத் தூக்கிப் போட வேண்டுமானால்கூட, கொழும்பு கையசைக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இக் கட்டுரையாளருக்கு அப்போது வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். ஆகவே இதுதான் மாகாண சபை அதிகாரம் என்பது தேர்தல் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் புரியும்.

எனவே தமிழரசுக் கட்சியோடு முரண்படாமல் விக்னேஸ்வரன் உரிய முறையில் செயற்பட்டிருந்தால், வடமாகாண சபையால் பல விடயங்களைச் சாதித்திருக்க முடியுமெனக் கூறுவோர் இந்திய- இலங்கை அரசுகளைப் பாதுகாக்கின்றனர் என்ற முடிவுக்கு வரலாம். விக்னேஸ்வரனின் அரசியல் கருத்துக்களில் குழப்பங்கள் இருப்பது வேறு.

ஆனால் அவர் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது ஏதாவது எதிர்ப்பாத்துக் கிடைக்காத பலரும் தமது சுயநலத்துக்காக விக்னேஸ்வரன் நல்ல சந்தர்ப்பத்தைத் தவறிவிட்டுள்ளாரெனக் கதை கட்டுவதன் ஊடே, இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு சுத்தம் செய்யப்படுகின்றது என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.
சிங்களக் குடியேற்றங்கள் பற்றியோ புத்த விகாரைகளை அமைத்துத் தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவது குறித்தோ ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச அறிக்கைகள் எதிலும் இதுவரை சிறிய குறிப்புக்கூட இல்லை.
ஏனெனில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டுத் தமிழ்த்தேசிய நிலப்பரப்பு துண்டாடப்பட்ட பின்னரே குறைந்தபட்ச 13 ஐக்கூடத் தீர்வாக வழங்க முடியும் என்ற  இலங்கையின் நிலைப்பாடு அமெரிக்க இந்திய அரசுகளுக்குத் தெரியாததல்ல..

வடமாகாண சபையோடு எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடாமல், முல்லைத்தீவில் படையினரின் ஒத்துழைப்புடன், அரச திணைக்களங்களினால் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டயர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் உறுப்பினர் ரவிகரன் 2018 ஆம் ஆண்டு மே மாதம் கூறியிருந்தார். வடமாகாண சபையினால் அதிகாரபூர்வமாக நில அளவீடுகளைச் செய்ய முடியவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவினால், இலங்கை வர்த்தமானி அறிவித்தல் மூலம் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டயர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக ரவிகரன் அப்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

இறுதிப் போர் நடந்த நந்திக்கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்த்து 4141.67 ஹெக்டயர் காணிகள் மற்றும் நீர்ப்பரப்புக்களையும், நாயாறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35 ஹெக்டயர் காணிகள் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் 469ஆம் அத்தியாயமான தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இலங்கை அரச வர்த்தமானி மூலம் நந்திக்கடல், நாயாறு ஆகிய பிரதேசங்கள் இயற்கை ஒதுக்கிடமென பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 8606.02 ஹெக்டயர்கள் இதற்குள் அடங்குவதாக ரவிகரன் குறிப்பிட்டிருந்தார்.

மணலாறு குடியேற்றம், மகாவலி எல் வலய போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இலங்கை இராணுவ முகாம் விஸ்த்தரிப்புகள், பௌத்த பிக்குகளின் மதத் திணிப்புக்கள், இலங்கைத் தொல்பொருள் திணைக்களம், இலங்கை வனவள துறை மற்றும் இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 80ஆயிரம் ஹெக்டயர்களுக்கு மேல் காணிகள், நீர்நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை வவுனியாவில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான காலம் முதல் இன்றுவரை ஆயிரத்தி 775.93 ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வவுனியா மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில் ஆயிரத்தி 788.3 ஏக்கர் பொதுக் காணிகளும் தனியாருக்குச் சொந்தமான 135 ஏக்கர் காணிகளோடு பத்தாயிரத்தி 923.67 ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்திடம் 2014 ஆம் ஆண்டு இறுதிவரை இருந்தாகவும் வவுனியா செயலகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஆனாலும் வவுனியா உள்ளிட்ட வன்னி பெருநிலப்பரப்பில் இலங்கைப் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூறியிருக்கிறார்.

பொதுக் காணிகளை இலங்கை அரச காணி என்று சொல்லுகின்றார்கள், மகாவலிக் காணி என்கிறார்கள், எல்.ஆர்.சீ நிலம் என்றுவேறு கூறுகின்றார்கள். இதைவிட வன பரிபாலன திணைக்களத்தின் காணி என்றும் சொல்கிறார்கள், வன ஜீவராசிகளுக்குரிய நிலம் எனவும் வகைப்படுத்துகின்றனர்.

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமாக உருவாக்கபட்டு வருகின்றமை RTI எனப்படும் தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெறப்பட்டதாக PEARL action என்ற ஆய்வு நிறுவனம் 2019 ஆம் ஆண்டு யூன் மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

புல்மோட்டைப் பிரதேசத்தை அண்மித்த பகுதியில் நடைபெறும் சிங்கள குடியேற்றங்கள் குறித்த ஆய்வு அறிக்கையில் அந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

தென்னமராவடியிலிருந்து புல்மோட்டை பயணிக்கும் வீதியில் புல்மோட்டை போககவௌ (B60) வீதியில் உள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வரும் இரண்டு தமிழ் கிராமங்கள்

 பௌத்த குருமாரின் வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள் அமைக்கப்பட்டுக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் மாலனூர் (12ஆம் கட்டை) ,மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) ஆகிய தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து வீதியின் ஓரமாக பல சிங்களக் குடும்பங்கள் காடுகளை வெட்டித் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கை வீடமைப்பு அதிகாரசபையால் பிரதேச செயலகத்தின் எந்தவிதமான அனுமதிகளுமின்றி வீட்டு திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டு வீடுகளை அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்குப் படையினர் ஒத்துழைப்பு வழங்கியுமுள்ளன.

அதேவேளை, கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலயத்திற்குள் புதிதாக இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகச் சென்ற வியாழக்கிழமை செய்திகள் வெளியாகியுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான தொழுநோய் வைத்தியசாலை மற்றும் முருகன் கோயில், கத்தோலிக்க தேவாலயம் உட்பட மதஸ்தளங்களும் அமைந்துள்ளன.

காலம் காலமாக சுகாதார அமைச்சுக்குச் சொந்தமாக இருந்த மாந்தீவு பிரதேசம் எப்போது பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டது என்பது எவருக்குமே தெரியாத நிலையில் அங்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாரம்பரிய தமிழ்க் கிராமமான நொச்சிக்குளத்தில் இரவோடு இரவாக புத்த சிலை ஒன்று வைக்கப்பட்டது. நொச்சிக்குளம் வவுனியா – திருகோணமலை வீதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகக் கிராமமாகும். இக்கிராமத்தை ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டதாக அன்று பிரதேச மக்கள் கூறியிருந்தனர்.

வவுனியா – திருகோணமலை எல்லையில் பொப்பசவேவா எனும் பெயரில் 800 சிங்களக் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான வீட்டுத்திட்ட வேலைகள் கோட்டாப ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திலும் முன்னெடுக்கப்படுகின்றன.

வவுனியாவில் உள்ள கொக்கச்சான்குளம் தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமாகும் 2017 ஆமு் ஆண்டு இந்த இடத்தில் மூவாயிரத்து 500 குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டு இந்த ஆண்டு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்கும் வேலைத் திட்டங்கள் இடம்பெறுகின்றன. கலாபோபஸ்பெர என்று சிங்களப் பெயரிடப்பட்டுள்ள கொக்கச்சான்குளத்தில் தற்போது தமிழர்கள் எவருமே இல்லை.

இவ்வாறான காணி அபகரிப்புகள், குடியேற்றங்கள் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த ஆண்டு வரையான பன்னிரண்டு ஆண்டுகள் துரிதமாக இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் தமிழ்ப் பண்பாட்டு மரபு அடையாளங்கள், கலாச்சாரங்கள் அனைத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன.யாழ் நாவற்குழியில் விகாரை அமைக்கப்பட்து முதல், இன்னும் பல சிங்களக் குடியேற்றங்கள், காணி அபகரிப்புகள் உண்டு. அதற்குரிய இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது பற்றிய புள்ளிவிபரங்கள் எதுவுமே தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைமைகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே மக்கள் சிந்திக்கும் காலமிது. அகிம்சை வழியில் தமிழர்கள் ஒரு தேசமாக இணைந்து பலமடைவதன் மூலமே வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியை நிறுவமுடியும். அதைவிட வேறுமாற்று வழி கிடையாது என்பதே ஆய்வாளர்களின் கருத்து.

13 ஐ ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்க முடியாதென்பதற்கு 2009 இன் பின்னர் அவசர அவசரமாகவும் திட்டமிடப்பட்டும் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிறந்த உதாரணம். இதனை அமெரிக்க இந்திய அரசுகளுக்குத் தமிழ் சட்டமேதைகளினால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லியிருந்தாலும் கிடைத்த பதில்தான் என்ன?

அதிகாரப் பகிர்வுக்கும் அதிகாரப் பங்கீட்டுக்குமான வேறுபாடுகள் தெரிந்தும், அமெரிக்க. இந்தியப் புவிசார் அரசியல்  நலன்களை சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுததாமல். அவர்கள் சொல்வதை மாத்திரம் கேட்டதன் விளைவுகள்தான் இவை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version