ஏனையவை

தமிழ் மீது பற்றுள்ளவர்கள் எம்மோடு இணையுங்கள் – கருணா

Published

on

தமிழ் மீது பற்றுள்ளவர்கள் எம்மோடு இணையுங்கள் – கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடனும் தமிழ் மீதும் பற்றுடைய அனைவரும் எம்மோடு இணைய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா – Vinayagamoorthi Muralitharan)) தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (11.07.2024) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் இனங்காணப்பட்டு அரசியல் தலைவராக இருந்து இயற்கை எய்திய சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பொறுப்பெடுத்து நடத்துவார் என்ற நம்பிக்கையில் கட்சி அவரிடம் கையளிக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட தலைவர் கூட இல்லாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சி என அனைத்தும் இன்று சிதறடிக்கப்பட்டு இருக்கிறது.

உருளைக்கிழங்கு மூடை எல்லாம் கட்டவிழ்த்து ஓடி விட்டது என்று கூறுகின்ற நடப்புக்களும் நடக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தையை தற்போது அமைச்சராக உள்ள டக்ளஸ் நையாண்டியாக கூறியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் கட்டப்பட்ட மூடை கட்டவிழ்ந்தது உண்மை தான். அதனால் தான் அதனை கட்டுவதற்கு நான் வந்திருக்கின்றேன்.

இனி எங்களுக்கு கீழ் வடக்கு – கிழக்கு அரசியல் நடவடிக்கை நடைபெறும் என்பதனை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன். 15 வருடங்கள் நான் பொறுமையாக இருந்தேன்.

எங்களால் கையளிக்கப்பட்ட அரசியல் பிரிவு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மக்களின் எதிர்காலம், பொருளாதாரம், மக்களின் வாழ்வு என்பவற்றை 30 வருட கால யுத்தத்தின் பின்னர் வளர்த்தெடுக்கும் நிலையே இருந்தது.

இங்கு திருடுவதும் சாப்பிடுவதுமான நிகழ்வுதான் நடந்தது. இன்று கூட அவர்கள் பிரிந்து போகவே இருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் அவிழ்த்துவிடப்பட்ட மூடைகளை கட்டவேண்டிய கடப்பாடு எனக்கு மட்டுமே உள்ளது.

இது கருணா அம்மான் காலம், எல்லோரும் எதிர்பார்த்திருங்கள். சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என அனைவரும் எம்மோடு இணைய வேண்டும்” – என்றுள்ளது.

Exit mobile version