இலங்கை

சாகடிக்கும் சட்டம்: டக்ளஸ் மீது குற்றச்சாட்டு

Published

on

சாகடிக்கும் சட்டம்: டக்ளஸ் மீது குற்றச்சாட்டு

கடற்தொழிலாளர்கள் பாதிப்பு ஏற்படும் விடயங்களை மேற்கொள்ளமாட்டேன் என கூறிவரும் கடற்றொழில் அமைச்சருக்குத் தெரியாமல் கடற்றொழிளாலர்களை சாகடிக்கும் புதிய சட்டத்திருத்த மூலக் கலந்துரையாடல் இடம் பெற்றதா என தொண்டைமானாறு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி நா. வர்ணாகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் – பாசையூர் கடற்றொழிலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று(14.10.2023) இடம்பெற்ற கடற்றொழிளாலர் அமைப்புகளுடன் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“96 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடற்றொழில் சட்டம் 16 சட்டவிரோத தொழில்களை தடை செய்யும் சட்டமாக பயன்பாட்டில் உள்ளது.

குறித்த சட்டத்தினை திருத்துவதற்கான புதிய முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைபுடன் கொழும்பிலிருந்து உயர் அதிகாரிகள் கொண்ட குழு அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்தது. சுமார் 360 பக்கங்களைக் கொண்ட வரைபில் 60 பக்கங்கள் மட்டும் தமிழில் பகிரப்பட்ட நிலையில் எஞ்சிய பக்கங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு கடற்றொழிளாலர் சமூகங்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்திய கடற்றொழிளாலர்களை ஒரு நொடியும் இலங்கை கடல் எல்லைக்குள் தொழில் செய்ய அனுமதிக்க மாட்டேன் என அமைச்சர் கூறுகிறார்.

ஆனால் புதிய சட்ட திருத்தத்தில் கடற்றொழில் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் நீக்கப்பட்டு துறை சார் அமைச்சருக்கும் கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

அவர்கள் நினைத்தால் கடலில் இந்திய கடற்றொழிளாலர்களை அனுமதிப்பது கடல் எல்லைகளை குறைப்பது தொழில் செய்ய கடற்தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது அதிகரிப்பது என அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நான் அமைச்சரிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன், உங்களுக்கு அறிவிக்காமலா கொழும்பிலிருந்து அதிகாரிகள் யாழ்ப்பாணம் வருகை தந்து குறித்த திருத்த சட்டம் மூலம் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தினார்கள்.

இந்தியா அத்துமீறிய கடற்றொழிலாளர்களால் வடபகுதி கடற்றொழிளாலர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை அமைச்சரால் தீர்வு ஏதும் முன் வைக்க முடியவில்லை.

இவ்வாறான நிலையில் எமது கடற்தொழிலாளர் மக்களை மீண்டும் சாகடிப்பதற்காக புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைச்சர் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலை கட்டுப்படுத்துகிறேன் என பல தடவைகள் கூறியும் கட்டுப்படுத்த முடிய வில்லை. வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்ட விரோத சுருக்கு வேலை தொழில் இடம்பெற்று வரும் நிலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் சுமார் 50க்கும் மேற்பட்ட படகுகளை பயன்படுத்தி சட்டவிரோத தொழில் செய்து வருகிறார்.

குறித்த நபரின் செயற்பாடுகள் தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையிலும் நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன?

ஆகவே தற்போது புதிய சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளிடம் இடம் பெற்றுவரும் நிலையில் கடற்தொழிலாளர் சங்கங்களின் விருப்பங்கள் இல்லாமல் குறித்த திருத்தத்தை மேற்கொள்ள கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“ஆகவே மீனவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய புதிய சட்ட திருத்தத்தை கைவிட்டு 96 ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதோடு அதனுடன் இணைத்து 2016 ஆம் ஆண்டு இழுவமடிச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும்“ என அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version