ஏனையவை

வடக்கில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

Published

on

வடக்கில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் கைது

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போலியான பெறுபேற்று சான்றிதழை சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிய நபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலை ஒன்றில் கற்பித்த ஒருவரே நேற்று (09.09.2023) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபருக்கு போலி பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழை தயாரித்து வழங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் சேவை பதவிநிலை உயர்வு பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் உறுதிப்படுத்தலுக்காக பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட போதே, அது போலியானது எனக் கண்டறியப்பட்டு மோசடி குற்றச்சாட்டின் கீழ் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றிய சில வருடங்களின் பின் மாகாண கல்வி அமைச்சினால் தொண்டர் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3 இற்கு உள்ளீர்க்கும் போது குறித்த நபருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

3 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக சம்பளம் பெற்று வந்த நிலையில் பதவிநிலை உயர்வுக்காக கல்வித் தகமை ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர் தரப்பரீட்சை சான்றிதழ் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உறுதிப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

சன்றிதழ் சுட்டெண் தவறு என்பது கண்டறியப்பட்டு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் திணைக்களத்துக்கு குறித்த நபர் மீது மோசடி குற்றச்சாட்டின் கீழ் அறிக்கையிடப்பட்டது.

பின்னர் பொலிஸ் திணைக்களத்தினால் குறித்த நபர் மீதான விசாரணை யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு குற்றவிசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டது.

பொலிஸ் பரிசோதகர் குணரோ ஜன் தலைமையிலான சிறப்பு குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி நபரை நேற்று கைது செய்தனர்.

அத்துடன், அவருக்கு உயர்தரப் பரீட்சையின் போலி சான்றிதழை தயாரித்து வழங்கிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version