ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளில் சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான மூன்று முக்கியத் திட்டங்களுக்கு அதன் உள்துறை அமைச்சர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர். பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று (டிசம்பர் 8) ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியில் உள்ள டென்மார்க்கால் கூட்டப்பட்ட சந்திப்பிலேயே இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்குள் குடியேறிகளின் வருகையைக் கட்டுப்படுத்துவது, சட்டவிரோதக் குடியேறிகளை நாடு கடத்தும் திட்டங்களைத் தீவிரப்படுத்துவது போன்ற மூன்று திட்டங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் பின்வரும் முக்கிய நகர்வுகள் உள்ளன:
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளுக்கு வெளியே குடியேறிகளுக்குரிய மையங்களைத் திறப்பது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை இந்தக் குடியேற்ற மையங்களில் தங்க வைப்பது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட்டு வெளியேற மறுக்கும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு நீண்ட காலத் தடுப்புக் காவல் தண்டனைகளை விதிப்பது.
அகதித் தஞ்சம் வழங்கப்பட்டாலும், அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டவர்களை ஒன்றிய நாடுகள் அல்லாத வேறொரு நாட்டுக்கு அனுப்பிவைக்கும் திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புகலிடம் கோருபவர்களைப் பகிர்ந்துகொள்ளும் திட்டங்களை ஏற்க மறுக்கும் சக உறுப்பு நாடுகளுக்குக் கடுமையான அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது:
அவ்வாறாகத் தாம் ஏற்க மறுக்கும் ஒவ்வொரு குடியேறிக்கும் 20,000 யூரோ (€20,000) நிதிப் பங்களிப்பை ஒன்றியத்துக்குச் செலுத்த வேண்டும்.
கிரேக்கம் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து குடியேறிகளை ஏற்றுக்கொள்ள பெல்ஜியம், சுவீடன் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட சில நாடுகள் மறுக்கும் நிலையில், குடியேறிகளின் சுமையைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்த அபராதத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

