உலகம்

எந்த நேரமும் கவிழும் நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம்: ஆதரவை விலக்கிய கூட்டணி கட்சி

Published

on

எந்த நேரமும் கவிழும் நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம்: ஆதரவை விலக்கிய கூட்டணி கட்சி

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை லிபரல் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வந்த சிறிய அரசியல் கட்சி ஒன்று, தனது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது. கனடாவில் ஜக்மீத் சிங் என்பவர் தலைமையில் இயங்கும் புதிய ஜனநாயகக் கட்சியே தற்போது லிபரல் அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப்பெற்றுள்ளது.

ஆனால், ஆட்சிக்கு ஆபத்து அல்லது தேர்தல் உருவாகும் சூழல் எதுவும் தற்போது ஏற்பட வாய்ப்பில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், பட்ஜெட்டை நிறைவேற்றவும் நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் புதிதாக ஒரு கட்சியின் ஆதரவை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022 முதல் லிபரல் அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக ஜக்மீத் சிங் அறிவித்துள்ளார். தற்போதைய சூழலில் ஜஸ்டின் ட்ரூடோவால் எதிர்கட்சியான கன்சர்வேடிவ்களை எதிர்கொள்ள முடியவில்லை என ஜக்மீத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2025 அக்டோபர் இறுதியில் முன்னெடுக்கப்படவிருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மிக எளிதாக வென்றுவிடும் சூழலே தற்போது உள்ளது என்றும் ஜக்மீத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லிபரல் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது என்றும், மிகவும் சுயநலவாதிகள் மற்றும் மக்களுக்காக போராடுவதற்கு பதிலாக பெருநிறுவன நலன்களுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என்றும் ஜக்மீத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டுமின்றி, லிபரல் கட்சியால் இனி மாற்றமாக இருக்க முடியாது என்றும் அவர்களால் இனி நம்பிக்கையை மீட்டெடுக்க முடியாது என்றும் ஜக்மீத் சிங் குறிப்பிட்டுள்ளார்.  2022ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2025 வரையில் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்திற்கு புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவளிக்கும்.

பதிலுக்கு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 2015 நவம்பர் முதல் ஆட்சியில் இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, தற்போது மிக மோசமான பின்னடைவை சந்திப்பார் என்றே ஆய்வுகளில் தெரிய வருகிறது.

புதிய ஜனநாயகக் கட்சியின் அழுத்தம் காரணமாகவே தேசிய அளவிலான பல் சுகாதார திட்டம் அமுலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version