உலகம்

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் இருந்த இந்திய இளைஞர் பலி

Published

on

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் இருந்த இந்திய இளைஞர் பலி

உக்ரைன் வான்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ரஷ்ய படையை சேர்ந்த கேரள மாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் 3ஆவது ஆண்டாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்து விட்டன.

இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா மற்றும் சில நாடுகள் எடுக்கும் சமாதான நடவடிக்கைள் எதுவும் பயன் தரவில்லை.

குறித்த போரில் ஆரம்பத்தில் பலத்த அடி வாங்கிய உக்ரைன் தற்போது ரஷ்யா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை குறி வைத்து அவ்வப்போது ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இவ்வாறு ரஷ்ய எல்லையில் உள்ள ரஸ்தோ என்ற இடத்தில் உக்ரைன் வான்படை குண்டுகளை வீசியது. அதில் 11 ரஷ்ய வீரர்களுடன் கேரள மாநிலம் திருச்சுற்றி அடுத்த கண்ணூர் என்ற கிராமத்தை சேர்ந்த சந்தீப் என்ற 36 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளார்.

உணவகத்தில் வேலை என்று கூறி கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யா அழைத்து செல்லப்பட்ட சந்தீப் கட்டாயத்தின் பேரில் ரஷ்ய படையில் சேர்க்கப்பட்டாரா?, அல்லது விருப்பத்தின் பேரில் இராணுவத்தில் இணைந்தாரா? என்பது தெரியவில்லை.

குடியுரிமை வேண்டுவோர் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவது ரஷ்யாவில் நடைமுறையில் உள்ள நிலையில் இது போன்று தம்மை இணைத்துக் கொண்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரஷ்ய இராணுவத்தில் இந்தியர்கள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டி வரும் நிலையில் இளைஞரின் மரணம் அதை மேலும் உறுதிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version