உலகம்

பிரித்தானியா பற்றியெரிய காரணமான பெண் கைது: வெளியான புகைப்படம்

Published

on

பிரித்தானியா பற்றியெரிய காரணமான பெண் கைது: வெளியான புகைப்படம்

பிரித்தானியாவில் Southport தாக்குதல்தாரி தொடர்பில் தவறான பதிவை முதலில் வெளியிட்டு, நாடு முழுவதும் கலவரம் வெடிக்க காரணமான பெண் கைதாகியுள்ளார்.

Southport தாக்குதல்தாரி ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், சிறுபடகு மூலமாக கடந்த ஆண்டு பிரித்தானியாவில் நுழைந்தவர் என்றும் தொடர்புடைய பெண் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், Chester பகுதி அருகாமையில் வைத்து அவர் கைதாகியுள்ளார். தற்போது அவர் பொலிஸ் காவலில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிரித்தானியாவின் முக்கியமான பகுதிகளில் கலவரம் வெடித்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

இணையத்தில் பரவிய தவறான தகவல்கள் காரணமாகவே பெரும்பாலான நகரங்களில் கலவரம் வெடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைதான பெண் ஒரு கோடீஸ்வரர் என்றும், Bernadette Spofforth என்பது அவரது பெயர் எனவும் தகவல் கசிந்துள்ளது.

ஆனால் தம்மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். Merseyside நகரில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்கு பின்னர் சமூக ஊடக பக்கத்தில் தவறான தகவலை Bernadette Spofforth பதிவிட்டுள்ளார்.

தாக்குதல் தாரியின் பெயர் உட்பட எந்த தகவல்களையும் விசாரணை அதிகாரிகள் வெளியிடும் முன்னர், சந்தேக நபரின் பெயர் Ali Al-Shakati என Spofforth தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், அவர் ஒரு புகலிடக்கோரிக்கையாளர், சிறு படகில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர், மட்டுமின்றி, MI6 கண்காணிப்பு பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஈதனைத்தும் உண்மை என்றால் பிரித்தானியா பற்றியெரிவது உறுதி என்றும் Spofforth தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், சுமார் 38 நிமிடங்கள் முன்னர் அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் இருந்து ஒருவர் பதிவிட்ட தகவல்களை மட்டுமே தாம் நகலெடுத்து பதிவிட்டுள்ளதாக 55 வயதான Spofforth பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் இதே தகவலை அப்போது பதிவிட்டிருந்தாலும், அவை உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்று பிள்ளைகளின் தாயாரான Spofforth பகிர்ந்த தகவலானது ரஷ்ய சமூக ஊடக பயனர்களால் தீயாக இணையத்தில் பரவியது.

அத்துடன் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களான Tommy Robinson மற்றும் Andrew Tate ஆகியோரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தனர். இதனால் தீவிர வலதுசாரிகளால் பிரித்தானியா முழுவதும் கலவரம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version