உலகம்

தடைநீக்கப்பட்ட காரசாரமான தென் கொரிய உணவு… கொண்டாடிய ஐரோப்பிய நாடொன்றின் மக்கள்

Published

on

தடைநீக்கப்பட்ட காரசாரமான தென் கொரிய உணவு… கொண்டாடிய ஐரோப்பிய நாடொன்றின் மக்கள்

மிகவும் காரமான உணவு என தடை செய்யப்பட்ட தென் கொரியாவின் ramen noodles வகை உணவு ஒன்று தற்போது தடைநீக்கப்பட்ட தகவல் டென்மார்க் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வியாழக்கிழமை முதல் குறித்த நூடுல்ஸ் வகை உணவுகள் மீண்டும் டென்மார்க் கடைகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

டென்மார்க்கில் ஜூன் மாதம் முதல் தென் கொரியாவின் Buldak instant ramen நூடுல்ஸ் வகைகளுக்கு தடை செய்யப்பட்டது. மிகவும் காரமான உணவு வகை அது என்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் கலந்துள்ள அதிக கேப்சைசின் அளவு மக்களில் கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கலவை, சாப்பிடும்போது எரியும் உணர்வை உருவாக்குகிறது. இது அதிக அளவில் உட்கொள்ளும் போது ஒருவகை போதை, குமட்டல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் என டென்மார்க் அதிகாரிகள் தரப்பு தெரிவித்திருந்தனர்.

தென் கொரியாவின் Samyang என்ற நிறுவனமே உலகம் முழுவதும் இந்த Buldak instant ramen நூடுல்ஸ் வகையை விற்பனை செய்து வருகிறது. டென்மார்க் அரசாங்கத்தின் தடையை எதிர்த்து Samyang நிறுவனம் முன்னெடுத்த நடவடிக்கை இறுதியில் வெற்றி கண்டுள்ளது.

வியாழக்கிழமை முதல் கடைகளில் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த நூடுல்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த நூடுல்ஸ் உணவை சுவைத்துள்ள கோபன்ஹேகன் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், உண்மையில் மிகவும் காரமான உணவு தான், ஆனால் அது தனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றார்.

சிறார்களும் இளம் வயதினரும் தொடர்புடைய காரசாரமான உணவை உட்கொள்ள வேண்டாம் என்றே ஜூன் மாதம் டென்மார்க் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

மட்டுமின்றி, சமூக ஊடகத்தில் இளம் வயதினர் சவால் விடும் போட்டியும் முன்னெடுத்தனர். தற்போது Buldak instant ramen நூடுல்ஸ் வகையில் மூன்றில் இரண்டு மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version