உலகம்

கோவிட் போன்று இன்னொரு பொது சுகாதார அவசரநிலை… அறிவிக்க தயாராகும் WHO

Published

on

கோவிட் போன்று இன்னொரு பொது சுகாதார அவசரநிலை… அறிவிக்க தயாராகும் WHO

அதிகரித்து வரும் mpox வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை காரணமாக, சர்வதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவில் mpox வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு உலக சுகாதார அமைப்பு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.

இதன் முதல்படியாக அவசர கூட்டம் ஒன்றை கூட்ட முடிவு செய்துள்ளதாக WHO நிர்வாக இயக்குனர் Tedros Adhanom புதன்கிழமை தெரிவித்துள்ளார். இதில், உலகெங்கிலும் உள்ள தொடர்புடைய துறைகளில் இருந்து சுயாதீன நிபுணர்கள் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

mpox வைரஸ் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆப்பிரிக்காவுக்கு வெளியே பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 2023ல் மட்டும் 27,000 பேர்களுக்கு mpox வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,000 பேர்கள் மரணமடைந்தனர். பெரும்பாலும் சிறார்களே மரணமடைந்துள்ளனர்.

மட்டுமின்றி, புருண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளிலும் mpox வைரஸ் பாதிப்பானது உறுதி செய்யப்பட்டது. இந்த நாடுகளில் இதற்கு முன்னர் mpox வைரஸ் பாதிப்பு பதிவாகவில்லை.

ஆப்பிரிக்காவின் 10 நாடுகளில் தற்போது mpox வைரஸ் பாதிப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 19 சதவிகிதமாக இருந்த இறப்பு எண்ணிக்கை தற்போது 160 சதவிகிதம் என அதிகரித்துள்ளது.

தற்போது இந்த நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் விலங்குகள் அல்லது அசுத்தமான பொருட்களுடன் உடல் தொடர்பு மூலமாகவும் mpox வைரஸ் பரவுகிறது. பொதுவாக காணப்படும் அறிகுறி என்பது தோல் அரிப்பு, புண்கள், காய்ச்சல், தசை வலிகள், தலைவலி, முதுகுவலி ஆகியவையாகும்.

Exit mobile version