உலகம்

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு: கண்ணீரில் தவிக்கும் மனைவி பிள்ளைகள்

Published

on

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு: கண்ணீரில் தவிக்கும் மனைவி பிள்ளைகள்

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பிரித்தானியா திரும்பலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் பிரித்தானியா திரும்பாமலே உயிரிழந்துவிட்டதால், அவரது மனைவி பிள்ளைகளும், குடும்பத்தினரும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

இலங்கைத் தமிழரான சுதர்சன் (41), 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். அன்று அவருக்கு திருமண நாள்!

சட்டவிரோதமாக நிறுவனம் ஒன்றில் பணி புரிந்ததாகவும், போலி ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டதையடுத்து அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

பிரித்தானிய குடியுரிமை பெற்ற தனது மனைவியான சுபத்ரா (41), மகன் ப்ரியன் (9), மகள் ப்ரியங்கா (8) ஆகியோரை விட்டு விட்டு இலங்கை திரும்பிய சுதர்சன் தனிமையில் வாடிவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், புலம்பெயர்தல் தீர்ப்பாயம் ஒன்று சுதர்சன் பிரித்தானியா திரும்பலாம் என தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், உள்துறைச் செயலகம், சுதர்சன் பிரித்தானியா திரும்புவதற்கான விசா நடைமுறைகளை பல மாதங்களாக தாமதப்படுத்திவந்துள்ளது. பின்னர் மனித உரிமைகள் சட்டத்தரணியான நாக கந்தையா உள்துறை அலுவலகத்தில் தாமதத்துக்கு எதிராக நடவடிக்கைகளை துவக்கிய பிறகே, மன்னிப்புக் கேட்டுக்கொண்ட உள்துறைச் செயலகம், இம்மாத துவக்கத்தில் சுதர்சன் பிரித்தானியா திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.

ஆனால், குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், இம்மாதம் 19ஆம் திகதி சுதர்சன் உயிரிழந்துவிட்டார்.

இலங்கையில் தான் தங்கியிருந்த வீட்டில் சுயநினைவிழந்து கிடந்த சுதர்சன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது மரணத்துக்கு sepsis என்னும் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மனைவி பிள்ளைகளைப் பிரிந்து சுதர்சன் மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதுடன், அவர் சரியாக சாப்பிடவும் இல்லை, தனது உடல் நலனை கவனித்துக்கொள்ளவும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். அத்துடன், பிரித்தானிய உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம்தான் சுதர்சன் உயிரிழக்கக் காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

Exit mobile version