உலகம்

ஈரான் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது இறந்தால் என்ன நடக்கும்

Published

on

ஈரான் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது இறந்தால் என்ன நடக்கும்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் மிக ஆபத்தான கட்டத்தில் தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பான உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அஜர்பைஜான் எல்லையில் ஈரானின் மலைப்பகுதியில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 2021ல் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட இப்ராஹிம் ரைசி, ஊழலுக்கும் ஈரானின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் எதிராகப் போராடும் சிறந்த நபராகத் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்துள்ளார்.

மட்டுமின்றி, ஜனாதிபதியாக தெரிவாகும் முன்னர் ஈரானில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். 1980 காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட காரணமான அமைப்பில் முக்கிய பொறுப்பில் ரைசி இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அப்படியான ஒரு பொறுப்பிலும் தாம் இடம்பெறவில்லை என ரைசி மறுத்துள்ளார். தற்போது அவரது நிலை குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், ஒரு ஜனாதிபதி பதவி துறந்தால் அல்லது பதவியில் இருக்கையில் இறந்தால் ஈரானின் அரசியலமைப்பு என்ன சொல்கிறது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இஸ்லாமிய குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 131 இன் படி, ஒரு ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது இறந்தால், நாட்டின் அனைத்து விடயங்களிலும் இறுதி முடிவைக் கொண்ட உச்ச தலைவரின் உறுதிப்பாட்டுடன் முதல் துணை ஜனாதிபதி பதவியேற்பார்.

அத்துடன் முதல் துணை ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோரைக் கொண்ட ஒரு கவுன்சில் அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

கடந்த 2021ல் ரைசி ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதால், அடுத்து 2025ல் தான் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் முன்னெடுக்கப்படும். தற்போது ரைசி பயணித்துள்ள ஹெலிகொப்டர் மோசமான வானிலை காரணமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டாலும்,

அவர் பயணித்த ஹெலிகொப்டர் ஈரானிய மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக சம்பவப்பகுதிக்கு செல்வதில் மீட்பு மற்றும் அவசர உதவிக்குழுவினர் போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஜனாதிபதி ரைசி மற்றும் அவருடன் பயணித்த வெளிவிவகார அமைச்சர் Hossein Amirabdollahian ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக இருக்க வாய்ப்புள்ளதாகவே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Exit mobile version