உலகம்

காசாவின் வெகுஜன புதைகுழிகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு

Published

on

காசாவின் வெகுஜன புதைகுழிகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு

இஸ்ரேலிய (Israel) துருப்புக்களின் தாக்குதலின் பின்னர், காசாவின் (Gaza) இரண்டு பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகள் குறித்து தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை (United Nations) அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் நம்பகமான புலனாய்வாளர்கள் தளங்களை அணுக வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்,

உண்மைகளை கண்டறிய காசாவில் அதிகமான ஊடகவியலாளர்கள் பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk), காசா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவ மையம் மற்றும் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டு தான் திகிலடைந்துள்ளதாக கூறியிருந்தார்.

மரணங்கள் தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்,

அத்துடன், தற்போது நிலவும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் சூழலைக் கருத்தில் கொண்டு இதில் சர்வதேச புலனாய்வாளர்களும் இருக்க வேண்டும் என்று வோல்கர் வலியுறுத்தியுள்ளார்.

போரில் ஈடுபடும் திறன் இல்லாத பொதுமக்கள், கைதிகள் மற்றும் பிறரை வேண்டுமென்றே கொலை செய்வது ஒரு போர்க் குற்றமாகும் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் வேதாந்த் படேல், வெகுஜன புதைகுழிகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தகவல் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version