உலகம்

எபோலா தொற்று உருவான குகை… அடுத்த பெருந்தொற்றை ஏற்படுத்தலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

Published

on

எபோலா தொற்று உருவான குகை… அடுத்த பெருந்தொற்றை ஏற்படுத்தலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

கென்யாவில் உள்ள மவுண்ட் எல்கான் தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலகின் மிக ஆபத்தான கிடும் குகை உலகின் அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

குறித்த குகையானது மனித வரலாற்றில் மிகவும் கொடிய வைரஸ்களின் இருப்பிடமாக மாறியுள்ளது என்றே நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள எபோலா மற்றும் மார்பர்க் கிருமிகள் அங்கு தொடங்கியதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை அடுத்து, தற்போது இது அடுத்த தொற்றுநோய்க்கான (மார்பர்க் வைரஸ்) தாயகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார நிறுவனம், மார்பர்க் வைரஸ் பெருந்தொற்றாக மாற வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. மார்பர்க் வைரஸ் என்பது ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும் மிகவும் கொடிய நோயாகும்.

இந்த நோய் உடலின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து இருதய அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். இறப்பு விகிதம் 88 சதவீதம் கொண்ட இந்த வைரஸ் எபோலாவை ஏற்படுத்தும் வைரஸுடன் தொடர்புடையது.

பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட துண்டுகள் அல்லது பிற பொருட்களைத் தொடுவதன் மூலம் இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட பின்னர் 3 வாரங்களுக்கு பின்னரே, நோயாளிக்கு அறிகுறிகள் தெரியவரும்.

அறிகுறிகள் பெரும்பாலும் மலேரியா மற்றும் எபோலாவை ஒத்திருக்கின்றன. பாதிப்பின் அடுத்த கட்டத்தில் பிறப்புறுப்பு, கண்கள், மூக்கு மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படுத்துகிறது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த வைரஸுக்கு தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவர்கள் மருந்துகள் மற்றும் திரவங்கள் மூலம் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version