உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published

on

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்றிரவு (17) 11.14 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் 8 பேர் காயமடைந்து உள்ளனர். எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள இகாடா எரிசக்தி உலை வழக்கம்போல் செயற்படுவதாக அந்நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வேறு என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், உவாஜிமா நகரில் 12 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டது.

அத்துடன் எஹிம் பகுதியில் ஒசூ நகரில் ஏற்பட்ட நிலச்சரிவினால், வீதியில் பாறைகள் உருண்டோடியதுடன் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஜப்பானில் 1,500 வரையான நிலநடுக்கங்கள் உணரப்படுகின்றதுடன் அவற்றில் பல நிலநடுக்கங்கள் லேசான அளவிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version