உலகம்
சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர் குறித்த சமீபத்திய தகவல்கள்
சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர் குறித்த சமீபத்திய தகவல்கள்
சுவிஸ் ரயில் நிலையமொன்றில் உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கினார்கள்.
இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பாக சில புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை காலை, சுவிட்சர்லாந்தின் Lausanne ரயில் நிலையத்துக்கருகில் உயிரற்ற உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
பிரபல ஊடகமான Blick செய்தித்தாள் இது குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ரயில்வே நடைமேடையில் இரத்தக்கரை காணப்படும் காட்சிகள் அந்த செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொலிசார் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து சோதனை நடத்திவரும் காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.
அதாவது, அது கொலையாக இருக்கக்கூடும் என்பதை மறைமுகமாக அந்த ஊடகம் தெரிவித்திருந்தது.
அந்த சம்பவம் தொடர்பாக பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது சில புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த உடல், தனது 40 வயதுகளிலிருக்கும் ஒரு ஆணின் உடல் என்றும், அவரது உடலுக்கருகிலேயே கத்தி ஒன்று கிடைத்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்ட விசாரணையில், அந்த நபருடையை உடலில் இருந்த காயங்கள், அவர் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதால் ஏற்பட்ட காயங்கள் என்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.