உலகம்

பாலைவனத்தில் கொத்தாக புதைக்கப்பட்டிருந்த புலம்பெயர் மக்களின் சடலம்

Published

on

பாலைவனத்தில் கொத்தாக புதைக்கப்பட்டிருந்த புலம்பெயர் மக்களின் சடலம்

லிபியாவின் பாலைவனப்பகுதியில் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்ட 65 புலம்பெயர் மக்களின் சடலங்களை மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தகவலை IOM என்ற சர்வதேச அமைப்பு ஒன்று வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அவர்களின் இறப்புக்கான காரணம் மற்றும் அவர்கள் எந்த நாட்டினர் என்பது தொடர்பான தரவுகள் எதுவும் இல்லை என்றும்,

ஆனால் அவர்கள் பாலைவனத்தின் வழியாக மத்திய தரைக்கடலை நோக்கி கடத்தப்பட்ட நிலையில் இறந்ததிருக்கலாம் என்றே நம்புவதாக IOM அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா மன்றத்தின் ஒரு பிரிவான IOM அமைப்பு குறிப்பிடுகையில்,

ஒரே கல்லறையில் 65 சடலங்களை அடக்கம் செய்துள்ள சம்பவம் உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து லிபியா அரசாங்கம் விசாரணை முன்னெடுப்பதாக IOM தெரிவித்துள்ளது.

தொடர்புடைய கல்லறையானது தென்மேற்கு லிபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. புலம்பெயர் மக்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ குடியேற்ற விதிகளுக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக IOM அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்தியதரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குள் நுழைய முயலும் புலம்பெயர் மக்களுக்கு தோதான இடங்களில் ஒன்றாக லிபியா உள்ளது. தற்போது மீட்கப்பட்ட சடலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க போதுமான தரவுகளை சேகரிக்க இருப்பதாக IOM அமைப்பு தெரிவித்துள்ளது.

லிபியாவில் இருந்து புறப்பட்ட சிறு படகு ஒன்று விபத்தில் சிக்கி, 60 புலம்பெயர் மக்கள் மரணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்தே, தற்போது பாலைவனத்தில் 65 பேர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

2023ல் மட்டும் இதுபோன்ற ஆபத்தான செயற்பாடுகளில் சிக்கி, புலம்பெயர் மக்கள் 8,565 பேர்கள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version