உலகம்

பிரான்ஸுடன் பாதுகாப்பு கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன்

Published

on

பிரான்ஸுடன் பாதுகாப்பு கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன்

உக்ரைனுடன் புதிய நீண்டகால பாதுகாப்பு கொள்கை ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, உக்ரைன் நாட்டுக்கு போரிட தேவையான கூடுதல் ஆயுதங்களை வழங்குவது, வீரர்களுக்கு உக்ரைனில் பயிற்சி அளிப்பது மற்றும் 26,805 கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவ உதவியை அனுப்பி வைப்பது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளதாக பிரான்ஸ் இராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தமானது 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் எனவும், இராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், வருங்காலத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கான வழியையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு முன் இதேபோன்ற ஒப்பந்தம் ஒன்றை ஜெர்மனியுடன் உக்ரைன் ஏற்படுத்தியது.

இதன்படி, ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ஜெலன்ஸ்கி மற்றும் ஜெர்மனி ஜனாதிபதி ஓலப் ஸ்கால்ஸ் இடையே, 10 ஆண்டுகாலம் நீடிக்க கூடிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என தெரிவித்தது.

இதனால், உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதுடன், ரஷ்யாவுக்கு தடை விதிப்பது மற்றும் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிப்பது, சொத்துகள் தொடர்ந்து முடக்கப்படுவது உறுதி செய்யப்படுதல் ஆகியவற்றை ஜெர்மனி மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரானது, இரண்டாண்டுகளை நெருங்கியுள்ளது.

இந்த போரின் தொடக்கத்தில், உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. எனினும், உக்ரைன் அரசு பதிலடி தாக்குதல் நடத்தி அவற்றை மீட்டுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதற்காக இராணுவ மற்றும் நிதியுதவிகளை அளித்து வருகின்றன.

மேலும், ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்து, சொத்துகளை முடக்கியும் வருகின்றன. எனினும், போரானது தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்த சூழலில், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து வெளிப்படையான ஆதரவை வழங்கி வருகின்றன.

Exit mobile version