உலகம்

புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு… தாயார், இரு பிள்ளைகள் மீது அமில வீச்சு: லண்டனை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி

Published

on

புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு… தாயார், இரு பிள்ளைகள் மீது அமில வீச்சு: லண்டனை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி

லண்டனில் Clapham பகுதியில் தாயார் மற்றும் இரு இளம் பிள்ளைகள் மீது அமில வீச்சில் ஈடுபட்ட நபர் தொடர்பில் பின்னணித் தகவல்கள் பல வெளியாகியுள்ளது.

Clapham பகுதியில் அமில வீச்சுக்கு பின்னர் அந்த நபர் மாயமாகியுள்ள நிலையில், இதுவரை பொலிசாரிடம் சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அந்த நபரை தீவிரமாக தேடிவரும் பொலிசார், பொதுமக்கள் எவரும் அந்த நபரை நெருங்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newcastle பகுதியில் தங்கியிருந்த 35 வயதான அப்துல் ஷுக்கூர் எஸேதி என்பவரே Clapham பகுதியில் அமில வீச்சு முன்னெடுத்தவர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இவர் ஒரு லொறியில் பதுங்கியிருந்து பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாகவே கூறப்படுகிறது. மட்டுமின்றி, இவரது புகலிடக் கோரிக்கை இதுவரை இருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புதன்கிழமை அமில வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாயாரும் அவரது இரு பிள்ளைகளும் ஆப்கான் அகதியான அப்துல் எஸேதியிடம் இருந்து ஒளிந்து வசித்து வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இருமுறை புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அப்துல் எஸேதி, மூன்றாவது முறை புகலிடக் கோரிக்கைக்கு முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமில வீச்சுக்கு இலக்கான அந்த தாயார் தனது இரு பிள்ளைகளுடன் Clapham பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் உள்ளூர் அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.

ஆனால் குறித்த தாயாரை தேடி வந்த அப்துல் எஸேதி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், அந்த தாயாரின் மூன்று வயது மகளை வலுக்கட்டாயமாக தூக்கி, தனது வெள்ளை நிற காருக்குள் அடைத்துள்ளார்.

இதில் தமது மகளை மீட்க அந்த தாயார் போராடிய போது, திடீரென்று அந்த நபர் அமில வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்து அந்த நபர் மாயமாகியுள்ளார்.

எஸேதி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காணும் பொதுமக்கள் உடனடியாக 999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும் கோரப்பட்டுள்ளது.

Exit mobile version