உலகம்

ஐக்கிய நாடுகள் ஹெலிகொப்டரை தாக்கி ஐவரை கடத்தி சென்ற கிளர்ச்சியாளர்கள்

Published

on

சோமாலியாவில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று தங்கள் எல்லைக்குள் தரையிறங்கிய நிலையில் அல்-ஷபாப் போராளிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஹெலிகொப்டர் ஒன்று சோமாலியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. இந்த நிலையில் தொடர்புடைய ஹெலிகொப்டரை சுற்றிவளைத்து தாக்குதல் தொடுத்த அல்-ஷபாப் போராளிகள் ஒருவரை கொன்றுள்ளதுடன் ஐவரை கடத்தி சென்றுள்ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக ஜிந்தீரே கிராமத்தில் தொடர்புடைய ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வெளிநாட்டவர்களும் ஒரு சோமாலிய நாட்டவரும் அந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளனர்.

மட்டுமின்றி தப்பிக்க முயன்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவரை காணவில்லை என்றும் உள்ளூர் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்த ஹெலிகொப்டரில் பயணித்தவர்கள் எந்த நாட்டினர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

அந்த ஹெலிகொப்டரானது மருத்துவ அவசரம் காரணமாக விசில் நகரத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்கள் கிராமப்புறங்களில் சில பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் சோமாலிய இராணுவ தளங்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மட்டுமின்றி, அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இன்னும் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவின் சில பகுதிகள் உள்ளது. மேலும் தலைநகர் மொகடிஷுவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இஸ்லாமிய அரசை நிறுவும் முயற்சியில் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து ஆண்டுக்கு பல மில்லியன் டொலர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையும் முன்னெடுத்து வருகிறது.

Exit mobile version