உலகம்

தவறாக குற்றம் சாட்டப்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்களுக்கு நீதியும் இழப்பீடும்: பிரித்தானிய பிரதமர் அறிவிப்பு

Published

on

தவறாக குற்றம் சாட்டப்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்களுக்கு நீதியும் இழப்பீடும் வழங்க புதிதாக சட்டம் கொண்டுவர நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தபால் துறையில், sub-postmaster என்னும் பொறுப்பிலிருந்த சுமார் 700க்கும் மேற்பட்ட தபால் அலுவலகப் பணியாளர்கள் மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் சிலர் தற்கொலை வரை சென்றனர்.

இது நடந்தது 2010ஆம் ஆண்டு. உண்மை என்னவென்றால், தபால் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் Horizon என்னும் சாஃப்ட்வேரின் குளறுபடியால்தான் இந்த தபால் அலுவலக ஊழியர்கள் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த உண்மை 2019ஆம் ஆண்டுதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், தபால் நிலைய ஊழியர்கள் தவறாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட, Mr Bates vs The Post Office என்னும் தொலைக்காட்சித் தொடர் ஜனவரி 1ஆம் திகதி வெளியானது.

அந்தத் தொடர் மூலம் உண்மையை அறிந்து கொண்ட மக்களில் மில்லியன் கணக்கானோர், அந்த காலகட்டத்தில் தபால் அலுவலக முதன்மைச் செயல் அலுவலராக இருந்த, Paula Vennells என்னும் பெண்ணுக்கு வழங்கப்பட்ட பிரித்தானியாவின் உயரிய விருதான Order of the British Empire என்னும் விருதைத் திரும்பப் பெறக்கோரி, புகார் மனு ஒன்றில் கையெழுத்திட்டனர்.

அந்த தொலைக்காட்சித் தொடர் பிரித்தானியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, விடயம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்நிலையில், மக்களுக்காக உழைத்த தபால் அலுவலகப் பணியாளர்கள், தங்கள் மீது தவறேதும் இல்லாத நிலையிலும், தங்கள் வாழ்வையும் கௌரவத்தையும் இழந்து அவதியுற்று வந்துள்ளதாக தெரிவித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி, அவர்களுக்கு கண்டிப்பாக நீதியும் இழப்பீடும் கிடைத்தாகவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி, தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைகள் செல்லாது என அறிவிக்கும் வகையில் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தண்டனை ரத்து செய்யப்பட்ட அனைவருக்கும் இழப்பீடாக 600,000 பவுண்டுகள் வழங்கவும், அல்லது, தங்களுக்கு வெறும் இழப்பீடு போதாது என கருதுவோர், அவர்களுடைய வழக்கை முழுமையாக மீளாய்வு செய்ய அனுமதியும் வழங்கப்பட உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சிறிது இழப்பீடு பெற்றுவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு 75,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக 20 ஆண்டுகளாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த தபால் துறைத் தலைவரான Alan Bates வரவேற்றுள்ளதுடன், நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த முடிவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version