உலகம்
அயர்லாந்தில் வெடிக்கும் வன்முறை
அயர்லாந்தில் வெடிக்கும் வன்முறை
அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 3 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து நகரம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் பாடசாலை முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐந்து வயதுச் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய ஐந்து மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் முப்பத்தைந்து வயதுடைய பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வன்முறையின் போது, ஒரு பொலிஸ் அதிகாரியும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தலைநகரில் இடம்பெறும் வன்முறையை கட்டுப்படுத்த அயர்லாந்து பிரதமர், முழு பலத்தையும் பயன்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், இதுவரை 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டப்ளின் நகரில் அமைதியை நிலைநாட்ட 400க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், வன்முறையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.