உலகம்

போர் நிறுத்தம் எட்டப்பட்டால்… காஸா புனரமைப்புக்கு தயார்: பிரபல நாட்டின் ஜனாதிபதி வெளிப்படை

Published

on

போர் நிறுத்தம் எட்டப்பட்டால்… காஸா புனரமைப்புக்கு தயார்: பிரபல நாட்டின் ஜனாதிபதி வெளிப்படை

காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், அங்கு சேதமடைந்த உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை மீண்டும் கட்டியெழுப்ப துருக்கி முயற்சிகளை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி எர்டோகன் அறிவித்துள்ளார்.

இஸ்ரேலை தீவிரவாத நாடு என்று வெளிப்படையாக அறிவித்தவர் துருக்கி ஜனாதிபதி எர்டோகன். மட்டுமின்றி, ஹமாஸ் படைகளை, தங்கள் நிலம் காக்க போராடும் போராளிகள் என்றும் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர் எர்டோகன். மேலும் காஸா பகுதிக்கான மனிதாபிமான உதவிகளையும் முன்னெடுத்து வருகிறார்.

இஸ்லாமிய நாடுகள் இனிமேலும் மெளனம் காப்பது முறையல்ல என வலியுறுத்திவரும் எர்டோகன், தற்போது காஸா புனரமைப்புக்கு தயார் என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

பெர்லின் நகரில் ஊடகவியலாளர்களை சந்தித்துள்ள எர்டோகன், போர்நிறுத்தம் ஏற்பட்டால், இஸ்ரேல் ஏற்படுத்திய அழிவை ஈடுகட்ட தேவையான அனைத்தையும் செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் வான் தாக்குதலுக்கு இலக்கான உள்கட்டமைப்புகள், அழிக்கப்பட்ட பள்ளிகள், மருத்துவமனைகள், தண்ணீர் மற்றும் மின்சார வசதிகளை மீண்டும் கட்டமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்பதை பிரதமர் நெதன்யாகு அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு விடுத்திருந்தார். மட்டுமின்றி, இஸ்ரேலில் அப்படியான சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் எர்டோகன் கோரிக்கை வைத்துள்ளார்.

தாமதப்படுத்தாமல் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை துருக்கி உன்னிப்பாக கவனிக்கும் என்றும் எர்டோகன் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் படைகளிடம் பணயக்கைதியாக உள்ள இஸ்ரேலியர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தமக்கு கோரிக்கை கடிதம் வந்துள்ளதாகவும், இதன் பொருட்டு துருக்கி உளவுத்துறை நடவடிக்கை முன்னெடுக்கும் என்றும் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version