உலகம்

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடு

Published

on

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடு

இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அவர், மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் குண்டு மழை பொழிவதாக கூறியுள்ள துணைப் பிரதமர், மருத்துவமனைகள் மற்றும் அகதி முகாம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றன. எனினும் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பாவில் முதல் நாடாக பெல்ஜியம் தற்போது தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேசம் விடுக்கும் கோரிக்கைக்கு இஸ்ரேல் செவிசாய்க்கவில்லை எனவும் பெல்ஜியத்தின் துணைப் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காசா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை குறித்து ஜி 7 செல்வந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஜப்பானில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்பின்னர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் ஆயிரத்து 400 பேரின் உயிர்களை காவுகொண்ட ஹமாஸ்சின் தாக்குதல்களுக்கு ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு ஆதரவு வழங்கியுள்ள ஜி 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், காசாவில் மனிதாபிமான மோதல் தவிர்ப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே காசாவில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரித்தானிய தொழில் கட்சித் தலைவர் சேர் கெய்ர் ஸ்டாயெர் நிராகரித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஹுசைய்ன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் காசாவில் உயிர்காக்கும் மருத்துவ உதவிப் பொருட்கள் உட்பட ஐந்து கனரக கொள்கலனங்களுடன் சென்ற வாகனத் தொடரணி மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

இந்த தாக்குதல்களில் இரண்டு கொள்கலன் வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், வாகனமொன்றின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுவரும் நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களில் 214 பேர் பலியாகியுள்ளனர்.

இதன்பிரகாரம் கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 569 ஆக உயர்வடைந்துள்ளது.

குறிப்பாக காசாவின் வட பிராந்தியம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் இன்றும் தெற்கு நோக்கி இடம்பெயர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாதுகாப்பான வழித்தடங்கள் ஊடாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பொதுமக்கள் செல்வதற்கு ஐந்து மணிநேர கால அவகாசத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வழங்கியிருந்தனர்.

Exit mobile version