உலகம்

காசாவிலிருந்து 7,000 பேரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவிப்பு

Published

on

காசாவிலிருந்து 7,000 பேரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து அறிவிப்பு

காசாவில் இருந்து சுமார் 7,000 வெளிநாட்டினரை வெளியேற்ற உதவுவதாக எகிப்து தெரிவித்துள்ளது.

காசாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையேயான போர் 27 ஆவது நாளாக நீடித்து வருகின்ற நிலையில் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இராணுவம் காசாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதனால் காசா உருக்குலைந்துள்ளதோடு அங்கு தண்ணீர், உணவு, மருந்து, எரிபொருள் என அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இணையமும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் இருந்து வெளிநாட்டினரை வெளியேற்ற இஸ்ரேல் அனுமதித்து நேற்று முதற்கட்டமாக வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ள 320 போ் ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் பாலஸ்தீனியர்கள் உள்பட காயமடைந்த 76 பேர் எகிப்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இன்று மேலும் 500 பேர் வரையில் எகிப்து சென்றுள்ளதோடு இதில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்த பாலஸ்தீனியர்கள் சுமார் 100 பேரும் வெளியேறுகிற நிலையில் வெளியேற்றம் இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version