உலகம்
சித்திரவதை செய்து பார்த்து சிரித்த கொலையாளி: திடுக் தகவல்கள்
சித்திரவதை செய்து பார்த்து சிரித்த கொலையாளி: திடுக் தகவல்கள்
சுவிஸ் இளம்பெண் ஒருவரை இந்தியாவுக்கு வரவழைத்து கொலை செய்த இந்தியர் வழக்கில், உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் டெல்லியிலுள்ள திலக் நகர் என்னுமிடத்தில் வெளிநாட்டவரான அழகிய இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், அவரது பெயர் நினா பெர்கெர் (Nina Berger, 30) என்பதும், அவர் சுவிஸ் நாட்டவர் என்பதும் தெரியவந்தது.
அவரை குர்பிரீத் சிங் என்னும் இந்தியர் இந்தியாவுக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குர்பிரீத் சிங்கிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
குர்பிரீத்தில் மொபைலை பொலிசார் சோதனையிட்டபோது, அவர் பல்வேறு வெளிநாட்டு இளம்பெண்களுடன் தொடர்பிலிருப்பது தெரியவந்துள்ளது.
சிங்கின் தந்தை ரத்தினக்கற்கள் வியாபாரம் செய்வதுடன், ஜோதிடமும் செய்துவருகிறார். டெல்லியில் பல இடங்களில் சிங் குடும்பத்துக்கு சொத்துக்கள் உள்ளன.
ஆகவே, சிங், ரத்தினக்கற்கள் அல்லது தனது ஜோதிடக்கலையை பயன்படுத்தி, வெளிநாட்டுப் பெண்கள் பலரைக் கவர முயற்சி செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கிறார்கள். விசாரணை தொடர்கிறது.
குர்பிரீத் நினாவைக் காதலித்ததாகவும், நினா தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் குர்பிரீத் அவரைக் கொலை செய்ததாகவும் முன்னர் ஒரு தகவல் வெளியானது.
நினா வேறொருவருடன் தொடர்பிலிருப்பது தெரியவந்ததால் அவரை இந்தியா வரவழைத்து குர்பிரீத் கொலை செய்ததாகவும் மற்றொரு தகவல் வெளியானது.
இந்நிலையில், குர்பிரீத்துக்கு நினா மீது காதல் எதுவும் இல்லை என்றும், அவரிடமிருந்து பணம் பறிக்கவே குர்பிரீத் திட்டமிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நினாவின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அவையும் திடுக்கிடவைக்கும் சில தகவல்களை தெரிவித்துள்ளன.
அதாவது, முன்பு நினா கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். ஆனால், உடற்கூறு ஆய்வில், நினாவின் கைகளையும் கால்களையும் கட்டிய குர்பிரீத், அவரை ஒரு பிளாஸ்டிக் கவருக்குள் அடைத்ததாகவும், மூச்சுத்திணறி நினா உயிரிழந்ததாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நினா சுமார் 30 நிமிடங்கள் உயிருக்குப் போராடியதாகவும், அதைப் பார்த்து குர்பிரீத் சிரித்துக்கொண்டிருந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.