உலகம்
சுவிஸ் இளம்பெண்ணை கொலை செய்த இந்தியர்
சுவிஸ் இளம்பெண்ணை கொலை செய்த இந்தியர்
சுவிஸ் நாட்டு இளம்பெண் ஒருவரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலை செய்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தங்களால் இந்தியா வர இயலாது என தெரிவித்துள்ளதால் வழக்கு சிக்கலாகியுள்ளது.
இந்தியாவின் டெல்லியிலுள்ள திலக் நகர் என்னுமிடத்தில் வெளிநாட்டவரான அழகிய இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், அவரது பெயர் நினா பெர்கெர் (Nina Berger, 30) என்பதும், அவர் சுவிஸ் நாட்டவர் என்பதும் தெரியவந்தது.
அவரை குர்பிரீத் சிங் என்னும் இந்தியர் இந்தியாவுக்கு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர். விசாரணையில் சிங் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கொடுத்துவருகிறார்.
முதலில் தனக்கு அந்தப் பெண்ணைத் தெரியாது என்று கூறிய சிங், பின்னர் தான் அவரைக் காதலித்ததாகவும், அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கொல்லப்பட்ட நினாவின் உறவினர்கள் தங்களால் இந்தியா வர இயலாது என தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது உடலை உடற்கூறு ஆய்வின்போது, அவரது உறவினர்கள் யாராவது உடன் இருக்கவேண்டும்.
அப்படியிருக்கும் நிலையில், தங்களால் இந்தியா வர இயலாது என நினாவின் உறவினர்கள் கூறியுள்ளதால், நினாவின் அடையாளத்தை உறுதி செய்ய, அவர்கள் தரப்பிலிருந்து நினாவின் கைரேகை முதலான விடயங்கள் அனுப்பப்படவேண்டும்.
ஆகவே, இந்திய பொலிசார் அந்த தகவல்களை சுவிட்சர்லாந்திலிருந்து பெறுவது தொடர்பில் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கிடையில், முன்னுக்குப் பின் முரணாக பேசிக்கொண்டிருக்கும் சிங்கை ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.