உலகம்

விண்வெளியில் விவசாயம்: கவனத்தையீர்த்த சீன விஞ்ஞானிகள்

Published

on

விண்வெளியில் விவசாயம்: கவனத்தையீர்த்த சீன விஞ்ஞானிகள்

சீனாவின் ஷென்சோ-16 விண்வெளி திட்டத்தின் மூலம் விண்வெளியில் அந்நாட்டு வீரர்கள் கீரை, சின்ன வெங்காயம், செர்சி தக்காளியை விளைவித்து அறுவடை செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆய்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

தற்போதைய நிலையில் விண்வெளி துறை தொடர்பான ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா முன்னிலையில் உள்ளன.

இது தவிர பிற நாடுகளும் விண்வெளி ஆய்வில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியால் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச விண்வெளி மையம் என்பது பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் லோவர் புவி சுற்றுவட்டபாதையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சீனா தனக்கென்று தனியான விண்வெளி மையத்தை அமைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 30ம் திகதி ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து ஷென்சோ-16 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.

இதில் 3 விஞ்ஞானிகள் பயணம் செய்திருந்தனர்.

இந்நிலையில் இவர்களின் தாவர ஆய்வுக்காக செடிகளை பயிரிடுவதற்கான சிறப்பு சாதனத்தை சீனா உருவாக்கியது.

இது தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தாவர வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை, ஈரப்பதம், ஒட்சிசன், கார்பன் டை-ஒக்சைடு உள்ளிட்டவை சரியான அளவில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

இதன் உதவியின் மூலமே தற்போது சீனா விண்வெளி வீரர்கள் செடிகளை பயிரிட்டு வெற்றி கண்டுள்ளனர்.

அதன்படி அவர்கள் பயிரிட்ட கீரை, செர்ரி தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவை நன்கு வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி இந்த குழுவினர் விண்வெளியில் ஆய்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் பூமிக்கு வர உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

Exit mobile version