உலகம்

வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியதா ஹமாஸ்

Published

on

வடகொரிய ஆயுதங்களை பயன்படுத்தியதா ஹமாஸ்

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினர் சில வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பல வடகொரிய ஆயுதங்களை ஈரான் போரில் ஈடுபடும் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ உள்ளிட்ட முக்கியஸ்தர்களை ரிஷி சுனக் சந்தித்துள்ளதுடன், போரில் உயிரிழந்தவர்களுக்கு பிரித்தானியா சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பலஸ்தீனர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதன் அவசியத்தை இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் காசா நகரத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் பெண் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஹமாஸின் ஆயுத கிடங்குகள், தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள், சுரங்க பாதைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், வடக்கு காசா பகுதிகளில் தற்போதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று எகிப்தில் இருந்து காசாவிற்கு செல்லும் உதவிகளை தடுத்து நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் நடந்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில், இஸ்ரேல் போர் விமானம் மத்திய காசா மீது மற்றுமொரு பாரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,402 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4,475 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காசாவில் 3,488 பேர் உயிரிழந்துள்னளர், 12 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர், சுமார் 1,500 ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்யப்பட்டுள்ளதாவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு கரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர், 1,300 பேர் காயம் அடைந்துள்ளனர். லெபனானில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version