உலகம்
ஆபரேஷன் அஜய்: 471 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 2 விமானங்கள்
ஆபரேஷன் அஜய்: 471 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 2 விமானங்கள்
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்களுடன் மூன்றாவது விமானமும், 274 இந்தியர்களுடன் நான்காவது விமானமும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் தரையிறங்கியது.
இஸ்ரேல் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் வரவேற்றார். இஸ்ரேலில் இருந்து வந்த இந்தியர்கள் அனைவருக்கும் இந்திய கொடிகளை அமைச்சர் வழங்கினார்.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதல்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஆபரேஷன் அஜய்யின் ஒரு பகுதியாக இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை அழைத்து வர இந்த சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இஸ்ரேலில் இருந்து தங்களை வெளியேற்றியதற்காக பயணிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். “இந்திய அரசுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். நாங்கள் அங்கே பயந்தோம். இதற்கு முன்முயற்சி எடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என பயணிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்த 197 இந்தியர்கள் பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் போன்ற முழக்கங்களை எழுப்பிய வீடியோவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து முதல் பட்டய விமானம் வியாழக்கிழமை 212 பேரை அழைத்து வந்தது. இரண்டாவது விமானத்தில் 235 இந்தியர்கள் திரும்பினர். இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்கள், இணைக்கப்பட்டுள்ள பயணப் படிவத்தை அவசரமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய தூதரகம் ஆபரேஷன் அஜய்யில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயண இடங்களை ஒதுக்குகிறது.
இஸ்ரேலில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்கான செலவை அரசே ஏற்கிறது. இஸ்ரேலில் 18,000 இந்திய குடிமக்கள் வாழ்கின்றனர். அவர்களில் மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வைர வியாபாரிகள் உள்ளனர். ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் 1300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 1,900 பேர் கொல்லப்பட்டனர்.