உலகம்

இஸ்ரேலிய சிறுமியின் உருக்கமான காணொளி

Published

on

இஸ்ரேலிய சிறுமியின் உருக்கமான காணொளி

கண் முன்னே தனது தந்தையை பயங்கரவாதிகள் சுடுவதை கண்டு இஸ்ரேலிய சிறுமி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

கடந்த 7ஆம் திகதி எதிர்பாராத நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் குழுவினர், ஏராளமான இஸ்ரேலியர்களைக் கொன்று குவித்தனர்.

அப்படியான தாக்குதலில் தன் கண் முன்னே தந்தையை ஹமாஸ் குழுவினர் சுடுவதைப் பார்த்த சிறுமியின் காணொளி, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் டேரியா என்கிற சிறுமி தனக்கு நடந்த நிகழ்வைக் கூறுகிறார்.

வார இறுதியில் தனது தந்தையைக் காண்பதற்காக காசாவிற்கு அருகில் இருக்கும் கிபுட்ஸ் என்ற இடத்திற்கு தனது தம்பியுடன் சென்றுள்ளார்.

அவரது தந்தை ட்விர் கரப் தனது இணையரோடு அந்தப் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று, அதிகாலையில் டேரியா எழும்போது அவரது தந்தை அவரை வீட்டின் உள்ளறையில் பதுங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

தந்தையின் கையில் கத்தியும் சுத்தியலும் இருந்துள்ளது. சற்று நேரத்தில் உள் நுழைந்த பயங்கரவாதிகள் தந்தையை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்தக் காட்சிகளைப் போர்வைக்குள் பதுங்கியிருந்தவாறு டேரியா பார்த்துள்ளார். போர்வையை விலக்கி டேரியாவைப் பார்த்துவிட்டு ஒன்றும் செய்யாமல் பயங்கரவாதிகள் நகர்ந்துள்ளனர்.

உதட்டு சாயத்தைப் பயன்படுத்தி வீட்டின் சுவரில் “அல் காசாத்தைச் சேர்ந்தவர்கள் (ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய குழுவினர்) குழந்தைகளை கொல்வதில்லை” என எழுதிச் சென்றுள்ளனர்.

“நான் பயந்துவிட்டேன். இனி அம்மாவை பார்க்கவே முடியாது என நினைத்தேன். யாரையும் பார்க்க முடியாது என நினைத்தேன்” என டேரியா கருத்து வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் வீட்டில் இருந்து சென்ற பிறகு டேரியா உதவி கேட்டு தனது அம்மாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அவரை இஸ்ரேலிய பொலிஸார் மீட்டு தாயாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version