உலகம்
ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! பணயக்கைதிகளை மீட்க அமெரிக்க சிறப்புப் படை
ஹமாஸ் மீண்டும் உக்கிர தாக்குதல்! பணயக்கைதிகளை மீட்க அமெரிக்க சிறப்புப் படை
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணிகளுக்காக அமெரிக்காவின் சிறப்பு பயிற்சி பெற்ற படைகள் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை சேர்ந்த மக்களை பணயக்கைதிகளாக கடத்திச் சென்று பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை கொலை செய்வோம் என எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், பணயக்கைதிகளை மீட்கும் சிறப்பு பயிற்சி பெற்ற அமெரிக்க படைகள் இஸ்ரேலுக்கு வந்திறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, இந்த அமெரிக்க சிறப்பு படைகள் ஹமாஸ் அமைப்பினரால் காசா நகரில் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் விரைவில் களமிறங்களாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதே சமயம் காசாவில் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டுள்ள அமெரிக்கர்களை சிறப்பு நடவடிக்கை மூலம் விடுவிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா நிராகரிக்கவில்லை என்று பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால் இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.
4-வது நாள் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேற்கு கரை பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு அருகில் இரண்டாவது கடற்படை விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கா நாசகாரி கப்பலை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்த்துவதாக அறிவித்தது.
அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் போர் விமானங்களையும் நகர்த்தவுள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்றும், அதன் பாதுகாப்பு உதவி ஞாயிற்றுக்கிழமை முதல் நகரத் தொடங்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஒஸ்ரின் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை இஸ்ரேல் அரசு நிராகரித்து விட்டதாக எகிப்து உளவுத் துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேசிய எகிப்து உளவுத் துறை அதிகாரி, இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த காஸா பகுதிக்குட்பட்ட பகுதியில் திட்டம் தீட்டப்படுவதாக பலமுறை இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டது.
எனினும் அது குறித்து விரிவாக பரிசீலிக்காமல் ஜெரூசலேம் அதனை நிராகரித்துவிட்டது.
இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு மொசாட் பலவீனப்பட்டு விட்டதா? என்ற கேள்வி தற்போது உலகின் பிரதான பேசு பொருளாக உள்ளது, எனினும் அது உண்மையல்ல என அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு மொசாட்டால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று எனவும் மொசாட் அதனை வலிந்து ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு ஈரானை அழித்தொழிக்க வேண்டிய தேவை உள்ளது, அதற்கான ஒரு வாய்ப்பாக இத்தாக்குதல் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.