உலகம்

ஆயுதமேந்திய குழு ஒன்றின் வெறிச்செயல்…  சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்கள்

Published

on

மெக்சிகோ நாட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் இருந்து கடத்தப்பட்ட இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வார இறுதி நாட்களை கொண்டாடும் பொருட்டு, பண்ணை ஒன்றில் 7 நண்பர்கள் ஒன்று கூடியுள்ளனர். 14 முதல் 18 வயதுடைய இந்த 7 பேர்களும் குடும்ப உறுப்பினர்கள் எவருமின்றி தனியாகவே சென்றுள்ளனர்.

இந்த நிலையில் பல்வேறு வாகனங்களில் ஆயுததாரிகளான நபர்கள் அந்த பண்ணைக்குள் ஞாயிறன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு அத்துமீறி நுழைந்துள்ளனர். அந்த குழுவால் கடத்தப்பட்ட இளைஞர்களின் சடலம் மட்டுமே பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது மெக்சிகோவின் Zacatecas மாகாணத்தில் நடந்துள்ளது. இதில் 6 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட, ஒருவர் குற்றுயிரான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் இதுவரையில் அந்த இளைஞர்களின் சடலங்களை அடையாளம் காணாத நிலையில், அரசாங்கம் தரப்பில் அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் கடத்தப்பட்ட தகவல் வெளியானதும் 300 ராணுவத்தினர் உட்பட மிகப்பெரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து தலைநகருக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, இளைஞர்கள் மாயமான தகவலை அடுத்து தொடர்புடைய குடும்பங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், செவ்வாய்க்கிழமை பிரதான சாலையை அவர்கள் முடக்கியுள்ளனர்.

இந்த கடத்தல் மற்றும் படுகொலைக்கு நோக்கம் என்ன என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. Zacatecas மாகாணம் மெக்சிகோ நாட்டிலேயே மிக அதிக வன்முறை சம்பவங்களுக்கு பெயர் போனது என்றே கூறுகின்றனர்.

இந்த 9 மாதங்களில் மட்டும் இதுவரை 500 பேர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version