உலகம்

சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

Published

on

சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

கனடாவின் இரண்டு பிரதான சீக்கிய அமைப்புகள், இந்தியாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

சீக்கிய தலைவர் ஒருவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு உறுதியான தொடர்பிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவித்த நிலையிலேயே இந்த இரு அமைப்புகளும் கனேடிய அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

ஒன்ராறியோவின் குருத்வாராஸ் கமிட்டி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குருத்வாராஸ் கவுன்சில் ஆகிய இரு சீக்கிய அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளன.

ஜூன் மாதத்தில் நடந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் வெளிநாட்டு சதி இருப்பது தொடர்பில் கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒருமித்த கருத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளன.

செப்டம்பர் 18ம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய உளவு அமைப்புகள் திரட்டிய தரவுகளின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்திற்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் தொடர்பிருப்பதாக உறுதி செய்திருந்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி என குறிப்பிட்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கைது செய்ய இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் தொடர்புடைய படுகொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே இந்தியா தற்போது மறுத்து வருகிறது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விளக்கமளித்த பின்னர், என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவிக்கையில், இந்த கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவையும் உட்படுத்த வேண்டும் என தாம் கியூபெக் மேல்முறையீடு நீதிமன்றத்திற்கு எழுத்து மூலமாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version