உலகம்
முக்கிய பாலத்தில் குண்டுவெடிப்பு!
ரஷியாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது இன்று குண்டுவெடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தன. அப்போது பாலத்தின் வழியாக வாகனத்தில் பயணித்த 3 பேர் வெடிவிபத்தில் பலியாகினர்.
ரெயில்வே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீதும் தீப்பொறி பறந்து தீப்பற்றியது. இதில், எரிபொருள் நிரப்பப்பட்ட 7 ரெயில் பெட்டிகள் தீப்பிடித்தன. இதனை தொடர்ந்து அந்த பாலத்தில், ரெயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குண்டு வெடிப்புக்கு காரணமான அந்த வாகனத்தின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் என்று ரஷியாவின் விசாரணைக் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரிமியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் சபாநாயகர், குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உக்ரைன் மீது குற்றம் சாட்டினார். எனினும் உக்ரைன் தரப்பு இதற்கு பொறுப்பேற்கவில்லை.
இச் சம்பவம் குறித்து உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் கூறுகையில், “சட்டவிரோதமான அனைத்தும் அழிக்கப்பட வேண்டும், திருடப்பட்ட அனைத்தும் உக்ரைனுக்குத் திரும்ப வேண்டும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்தும் வெளியேற்றப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்
You must be logged in to post a comment Login