உலகம்
ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி மீது படுகொலை முயற்சி
துப்பாக்கிதாரி ஒருவரால் குறிவைக்கப்பட்ட ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி கிறிஸ்டீனா பெர்னாண்டஸ் டி சிர்ச்னர் படுகொலை முயற்சியில் இருந்து நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
கிறிஸ்டீனா தனது வீட்டுக்கு வெளியில் ஆதரவாளர்களை வரவேற்றிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரது முகத்துக்கு நேரே துப்பாக்கியை நீட்டியுள்ளார்.
அந்தத் துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்தபோதும் துப்பாக்கிதாரி விசையை அழுத்தவில்லை என்று ஜனாதிபதி அல்பார்டோ பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
கிறிஸ்டீனா ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி நீதிமன்றத்தில் இருந்து திரும்பி இருந்தார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
35 வயதான பிரேசில் நாட்டவர் என்று உள்ளூர் ஊடகங்கள் அடையாளப்படுத்தி இருக்கும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் முயற்சிக்கான காரணத்தை கண்டறியும் விசாரணையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (01) நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி பொர்னாண்டஸ், “கிறிஸ்டீனா தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான தொழில்நுட்ப ரீதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஏனெனில் துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்தபோதும் சுடப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலை கண்டித்த அவர் இந்தக் கொலை முயற்சி 1983 இல் நாட்டில் ஜனநாயகம் திரும்பிய பின் நிகழ்ந்த மிக மோசமான சம்பவம் என்றும் விபரித்தார்.
ஊழல் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்து வரும் 69 வயதான கிறிஸ்டீனாவுக்கு ஆதரவாக அவரின் வீட்டுக்கு வெளியில் அண்மைக்காலத்தில் மக்கள் திரண்டு வருகின்றனர்.
2007 தொடக்கம் 2015 வரை கிறிஸ்டீனா ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தனது கோட்டையாக உள்ள படகோனியாவில் அரச ஒப்பந்தங்களை மோசடியாக வழங்கியதாகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவர் குற்றங்காணப்பட்டால் 12 ஆண்டுகள் சிறை மற்றும் அரசியலில் ஈடுபட ஆயுள் காலத் தடையும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனினும் அவர் மீது மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அதன் மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மாதங்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login