விளையாட்டு
ஒருநாள் தொடரையும் வெல்லுமா தென்னாபிரிக்கா!!
இந்தியா- தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் நாளை(19) ஆரம்பமாகிறது.
டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இளம் நட்சத்திரம் ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் எதிர்பார்ப்பில் உள்ளது.
துடுப்பாட்டம், பந்துவீச்சு,களத்தடுப்பு என எதிலும் சளைக்காமல் சமபலத்துடன் உள்ள தென்னாபிரிக்கா அணி இந்தியாவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணியில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் உள்ளனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 85-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 84 ஆட்டத்தில் இந்தியா 35-ல், தென் ஆப்பிரிக்கா 46 -ல் வெற்றிபெற்றுள்ளன. 3 போட்டி முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிறது.
இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, இஷான்கிஷன், வெங்கடேஸ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், அஸ்வின், சாஹல், தீபக் சாகர், பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ்.
தென் ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), கேசவ் மகாராஜ் (துணை கேப்டன்), குயின்டன் டிகாக், மார்க்கிராம், ஜான்மேன் மலன், மில்லர், வான்டர் டூசன், ஹம்சா, கெய்ல்வெரீனி, ஷம்சி, ரபடா, பிரிட்டோரியஸ், பெகுலுவாயோ, பர்னல், நிகிடி, சிசாந்தா மகலா, ஜான்சென்.
You must be logged in to post a comment Login