யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா சென்ற வான், கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கிளபென்பேர்க் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுகொண்டிருந்த வாகனமுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரத்னகலாவதி (வயது 72) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment